கேரளத்தில் சுற்றுலாத் துறையை மீட்டெடுக்கும் முயற்சியாக சுற்றுலாப் பயணிகள் முடிந்தளவு கரோனா தொற்றால் பாதிப்படையாமல் இருக்க மாநில அரசு பாதுகாப்பு வளைய நடைமுறையைக் கொண்டுவந்துள்ளது.
இதுதொடர்பாக கேரள சுற்றுலாத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது:
"கேரளத்தில் பாதுகாப்பு வளையத்தினுள் விமான நிலையம் வந்து இறங்கும் சுற்றுலாப் பயணிகள் தடுப்பூசி செலுத்தப்பட்ட அதிகாரிகளையே சந்தித்து உரையாட நேரிடும். விமான நிலையத்திலிருந்து செல்ல வேண்டிய இடத்துக்கு வாடகைக் கார்கள் மூலம் செல்லலாம். அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களின் வாடகைக் கார்களே இதற்கு பயன்படுத்தப்படும். அந்த ஓட்டுநர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள். விடுதிகள், தங்குமிடங்கள், ரிசார்ட்டுகளிலும் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தியிருப்பார்கள்."
கேரளத்தில் அனைத்து சுற்றுலாத் தலங்களும் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. குறைந்தபட்சம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியிருக்கும் பயணிகள் அல்லது 72 மணி நேரத்துக்கு முன்பு எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர் பரிசோதனையில் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட சான்றிதழைக் கொண்டு வரும் பயணிகள் அனுமதிக்கப்படுவர்.
கேரள மொத்த மக்கள் தொகையில் 43.37 சதவிகிதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். 18.08 சதவிகிதம் பேர் இரண்டு தவணை தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.