அசாமில் 5 வயது குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியான நிலையில், இது தொடர்பாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அசாம் மாநிலம் சாரீடியோ மாவட்டத்தில் 5 வயது குழந்தை கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை நரபலி கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளனர்.
தேயிலை தோட்டத்தில் உள்ள வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 5 வயது பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர்கள் திங்கள்கிழமை இரவு கடத்தியுள்ளனர். தனது தங்கையை காணவில்லை என அக்குழந்தையின் மூத்த சகோதரி செஃப்ரை காவல் நிலையத்தில் செவ்வாய்கிழமை அன்று புகார் அளித்தார்.
இதையும் படிக்க | தலைமை செயலாளரை தாக்கியதாக வழக்கு: அரவிந்த் கேஜரிவால் விடுவிப்பு
பின்னர், குழந்தையின் உடல் ஆற்றங்கரை அருகே மீட்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறை மூத்த அலுவலர் ஒருவர் கூறுகையில், "குழந்தையின் உடல் செவ்வாய்கிழமை இரவு சிங்லு ஆற்றங்கரை அருகே மீட்கப்பட்டது. சிவப்பு துணி, சாம்பல் உள்பட தாந்திரீகம் செய்யும்போது பயன்படுத்தப்படும் பொருள்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளது. எனவே, குழந்தை நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதுகிறோம். உடல் உடற்கூறாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளியை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை நடத்திவருகிறோம். குழந்தையின் பெற்றோரிடம் விசாரணை நடத்தியுள்ளோம். குழந்தையின் அப்பா உள்பட 10 பேரை அடுத்த கட்ட விசாரணைக்காக அழைத்து வந்துள்ளோம்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. நரபலி நடந்துள்ளது என்பதை மறுக்கமுடியாது. பழங்குடியினர் அதிகம் வாழும் தேயிலை தோட்டங்களில் இம்மாதிரியான நரபலி சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது" என்றார்.