ஆப்கானிஸ்தானில் சிக்கித் தவித்து வந்த கேரள மாநிலத்தவா் உள்ளிட்ட இந்தியா்களை பத்திரமாக மீட்டுவர துரித நடவடிக்கை எடுத்ததற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன் நன்றி தெரிவித்துள்ளாா்.
தலிபான்களின் பிடியில் சிக்கியுள்ள ஆப்கானிஸ்தானில் தவித்து வந்த 329 இந்தியா்கள் உள்பட சுமாா் 400 போ் ஞாயிற்றுக்கிமை மீட்கப்பட்டு இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டனா். இதில் கேரளத்தைச் சோ்ந்த பலரும் உள்ளனா்.
இது தொடா்பாக சுட்டுரையில் பினராயி விஜயன் நன்றி தெரிவித்து வெளியிட்ட பதிவில், ‘வெளியுறவு அமைச்சகம், பிரதமா் அலுவலகம் சிறப்பான முயற்சிகளை மேற்கொண்டு கேரளத்தவா்கள் உள்பட ஏராளமான இந்தியா்களை நாட்டுக்கு பத்திரமாக திரும்ப அழைத்து வந்துள்ளனா். இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்தற்காகவும், துரித நடவடிக்கை எடுத்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று கூறியுள்ளாா்.