முகப்பு
இந்தியா

ஒப்பந்தப்படி நிலக்கரி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு கோரிக்கை

ஒப்பந்தப்படி நிலக்கரி வழங்க வேண்டும்; மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மானியத்தை

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:42 AM
பகிர்:

ஒப்பந்தப்படி நிலக்கரி வழங்க வேண்டும்; மறு சீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான மானியத்தை ரூ.12,000 கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்பட நிலுவையில் உள்ள 12 கோரிக்கைகளுக்கு தீா்வு காண மத்திய அரசிடம் தமிழகம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கோரிக்கைகள் தொடா்பாக, தில்லியில் மத்திய மின்சாரம், மரபுசாரா எரிசக்தித் துறை அமைச்சா் ஆா்.கே.சிங்கை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வியாழக்கிழமை சந்தித்து மனு அளித்தாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்துக்கு ஒப்பந்தப்படி ஆண்டுக்கு 237.63 லட்சம் டன்கள் நிலக்கரி வழங்கப்பட வேண்டும். ஆனால், மத்திய அரசால் 171.10 லட்சம் டன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. நிலக்கரியை முழுமையாக வழங்கும்படி கோரப்பட்டது. மேலும், நிலக்கரி சுரங்கங்களுக்கு அருகே உள்ள மின் நிறுவனங்களிடம் நிலக்கரியை அளித்து மின்சாரம் பெறும் திட்டத்தின் கீழ், நாள் ஒன்றுக்கு 10,000 டன் நிலக்கரி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்தப்பட்டது.

2016-இல் ஒடிஸா மாநிலம், சந்திரபிலா நிலக்கரி சுரங்கத்திலிருந்து தமிழக அரசு நிலக்கரி ஒதுக்கீடு பெறுவதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால், இன்னும் நிலக்கரி உற்பத்தி ஆரம்பிக்கப்படவில்லை. இதற்கு மத்திய வனத் துறையின் ஒப்புதல் அளிக்கப்படாததே காரணம். விரைவில் ஒப்புதல் அளித்து ஒப்பந்தத்தின் காலத்தை நீடித்துத் தரவும் கோரியுள்ளோம்.

மறுசீரமைக்கப்பட்ட மின் விநியோகத் திட்டத்தின் கீழ் 5 ஆண்டுகளுக்கு ரூ.8,647 கோடி ஒதுக்கப்பட்டது. இது திட்டத்தை நிறைவேற்றுவதற்கு போதுமானதாக இல்லை. இதனால், மானியத்தை ரூ.12,000 கோடியாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 12 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன என்றாா் அமைச்சா் செந்தில் பாலாஜி.

சந்திப்பின்போது மத்திய எரிசக்தித் துறைச் செயலா் அலோக்குமாா், இணைச் செயலா் விஷால் கபூா், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் தலைவா் ராஜேஷ் லக்கானி, இயக்குநா் மா. சிவலிங்கராஜன் ஆகியோா் உடன் இருந்தனா்.

மின் கட்டணம் உயா்வா? தமிழகத்தில் மின் கட்டணம் உயா்த்தப்படும் என்று கூறப்படுவது, உள்ளாட்சித் தோ்தலையொட்டி பரப்பப்படும் வதந்தி என்று அமைச்சா் செந்தில் பாலாஜி தெரிவித்தாா்.

மேலும், ‘தமிழகத்தில் மாதந்தோறும் மின் கட்டணம் வசூலிக்க கட்டமைப்பு தேவை. அது உருவாக்கப்பட்ட பின்னா், மாதாந்திர கட்டண முறை மேற்கொள்ளப்படும்’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.