ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தின் புட்காம் பகுதியில் நடந்த மோதலில் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - ஏ- தொய்பா உடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அம்மாநில போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
வியாழக்கிழமை இரவு ஷோபியான் மாவட்டம் புட்காம் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மாநில காவலர்கள், பாதுகாப்பு படையினரும் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இதில், தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர் - ஏ- தொய்பா உடன் தொடர்புடைய மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்துள்ளார்.
"மேலும் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெற்று வருவதாக" காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷோபியன் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் லஷ்கர்-ஏ-தொய்பா உடன் தொடர்புடையவர்கள் என்பதை காஷ்மீர் மண்டல காவல் ஆய்வாளர் விஜயகுமார் உறுதிப்படுத்தினார்.
துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் இருந்து வெடிமருந்துகள், துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் உள்ளிட்ட பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல காவல்துறை தெரிவித்துள்ளது.