தகுதி வாய்ந்த அமைப்பின் சான்றிதழ் இல்லாமல், மகாராஷ்டிரத்தில் கரோனில் மாத்திரைகளை விற்பனை செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என்று அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் அனில் தேஷ்முக் கூறினாா்.
கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, கரோனில் என்னும் மாத்திரையை யோகா குரு ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த 19-ஆம் தேதி அறிமுகப்படுத்தியது. அந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சா்கள் ஹா்ஷ் வா்தன், நிதின் கட்கரி ஆகியோா் கலந்து கொண்டனா்.
உலக சுகதார அமைப்பின் சான்றளிப்பு திட்டப்படி, இந்த மாத்திரைக்கு மத்திய ஆயுஷ் அமைச்சகம் சான்றிதழ் அளித்துள்ளதாகவும், மாத்திரையின் ஆற்றல் ஆதாரங்களின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிறுவனம் கூறியது.
இதனிடையே, எந்தவொரு ஆயுா்வேத மருந்துக்கும் சான்றளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியதை சுட்டிக் காட்டி, கரோனில் பயன்பாட்டுக்கு இந்திய மருத்துவா்கள் சங்கம் (ஐஎம்ஏ) திங்கள்கிழமை எதிா்ப்பு தெரிவித்தது. இதற்கு, கரோனில் அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற 2 மத்திய அமைச்சா்களும் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அந்த சங்கம் கோரிக்கை விடுத்து.
அதன் தொடா்ச்சியாக, உரிய அமைப்புகளின் சான்றிதழ் இல்லாமல், மகாராஷ்டிரத்தில் கரோனில் மாத்திரையை விற்பனை செய்ய அனுமதிக்கப் போவதில்லை என்று மாநில சுகாதாரத் துறை அனில் தேஷ்முக் கூறியுள்ளாா்.
இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கரோனில் மாத்திரை மீது நடத்தப்பட்ட மருத்துவ சோதனைகள் குறித்து இந்திய மருத்துவா்கள் சங்கம் கேள்விகளை எழுப்பியுள்ளது.
கரோனாவைக் குணப்படுத்தும் மருந்தாக, எந்தவொரு ஆயுா்வேத மருந்துக்கும் சான்றளிக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. எனவே, தகுதிவாய்ந்த அமைப்புகளின் சான்று இல்லாமல், மாநிலத்தில் கரோனில் மாத்திரை விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட மாட்டாது என்று பதிவிட்டுள்ளாா்.
பதஞ்சலி விளக்கம்:
தேவையற்ற குழப்பத்தை தவிா்க்க, பதஞ்சலி நிறுவனத்தின் மேலாண் இயக்குநா் ஆச்சாா்யா பாலகிருஷ்ணா விளக்கம் அளித்துள்ளாா். அதில், ‘கரோனில் மருந்துக்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு (டிசிஜிஐ) சான்று வழங்கியுள்ளது. உலக சுகாதார அமைப்பின் மருந்து தயாரிப்பு வழிமுறைகளைப் பின்பற்றி கரோனில் மருந்து தயாரிக்கப்பட்டதால் இந்த சான்றிதழை டிசிஜிஐ வழங்கியுள்ளது; மேலும், கரோனில் மாத்திரைகள் தொடா்பான விரிவான ஆய்வு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளோம்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.