ஜம்மு-காஷ்மீர்: 13 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு நீக்கம்
ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவல் குறைந்ததையடுத்து 13 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கை நீக்கம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவல் குறைந்ததையடுத்து 13 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கை நீக்கம் செய்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் தற்போதைய நிலவரப்படி 4,048 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 3,08,246 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ள நிலையில் 4,335 பேர் பலியாகியுள்ளனர். 40,14,703 பேருக்கு முதல் தவணையும், 7,46,876 பேருக்கு 2ஆம் தவணையும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீரில் கரோனா பரவல் குறைந்ததையடுத்து ஜம்மு, கத்துவா, சம்பா, பூஞ்ச், ரஜோரி, அனந்த்நாக், பந்திபோரா, பாரமுல்லா உள்ளிட்ட 13 மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு நீக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
அதேசமயம் 13 மாவட்டங்களில் தினசரி இரவு ஊரடங்கு இரவு 8 மணி முதல் காலை 7 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய உத்தரவின்படி, அனைத்து வெளிப்புற கடைகளும் வாரத்தின் அனைத்து நாள்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படுகின்றன. உட்புற வணிக வளாகங்கள் மற்றும் மால்களில், தடுப்பூசி போட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்படுகிறது. உணவகங்கள் மற்றும் பார்களில் 50 சதவீதம் பேருடன் இயங்க அனுமதியளிக்கப்படுகிறது.
நீச்சல் குளங்கள் திறக்க அனுமதி கிடையாது. மேலும் மற்ற ஏழு மாவட்டங்களில், வார இறுதி மற்றும் தினசரி இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். அதேசமயம், அனைத்து வெளிப்புற கடைகள் மற்றும் பஜார்கள் திங்கள் முதல் வெள்ளி வரை திறக்க அனுமதிக்கப்படுகின்றன. உட்புற ஷாப்பிங் வளாகங்கள் மற்றும் மால்களில் 25 சதவீத கடைகள் திறக்க அனுமதிக்கப்படுகின்றன என்பன உள்ளிட்ட தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.