மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவிவருவதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு சுமத்தியுள்ள நிலையில், மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் அதற்கு இத்தாலி மொழியில் பதில் அளித்துள்ளார்.
கரோனா இரண்டாம் அலையின்போது ஆக்சிஜன் பற்றாக்குறை மிகப் பெரும் பிரச்னையை கிளப்பியது. இதன் காரணாமாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்தனர்.
இதனிடையே, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த விவகாரத்தில், காங்கிரஸ், பாஜக கட்சிகளுக்கிடையே கருத்து மோதல் நிலவிவருகிறது.
இந்நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி மேற்கொண்ட விமர்சனத்திற்கு மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் இத்தாலி மொழியில் பதில் அளித்துள்ளார்.
"ஆக்சிஜன் பற்றாக்குறை மட்டும் இல்லை. அப்போதும் இப்போதும் கூர்ந்து அறியும் திறனும் உண்மையும் இல்லை" என ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் விமர்சித்திருந்தார்.
இதற்கு இத்தாலி மொழியில் பதில் அளித்துள்ள மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங், "நான் ஒரு இளவரசன் குறித்து சொல்லியாக வேண்டும். அவருக்கு மூளை அப்போது இப்போது எப்போதும் இருந்ததில்லை. ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த தரவுகளை மாநிலங்களே வைத்திருக்கின்றன. உங்கள் கட்சி ஆளும் மாநிலங்களில் இதுகுறித்த பட்டியலை வெளியிடும்படி சொல்லலாம். அதுவரை, பொய் கூற வேண்டும்" என பதிலடி கொடுத்துள்ளார்.