கரோனா பாதித்து, கவலைக்கிடமான நிலையில் உயிருக்குப் போராடி வரும் தனது கணவரின் உயிரணுவை சேமித்து, பிறகு அதன் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பிய மனைவிக்கு, குஜராத் உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த் ஒரு தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் நேற்று பிறப்பித்துள்ளது. இதன் மூலம், தனது கணவரின் உயிரணுவைக் கொண்டு ஐவிஎஃப் முறையில் அவரது மனைவி குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதாவது, மிகவும் அசாதாரண சூழ்நிலையில் கணவரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால், அவரது உயிரணுவை சேகரிக்க அனுமதி அளிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குஜராத் உயர் நீதிமன்றத்தில், கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருபவரின் மனைவி தாக்கல் செய்த மனுவில், தனது கணவர் கரோனா பாதிக்கப்பட்டு, கடந்த மே 10ஆம் தேதி வதோதராவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.
நுரையீரல் செயல்படாததால் தற்போது அவர் எக்மோ கருவியின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருகின்றன.
எனவே, இந்த சூழ்நிலையில், கணவரின் உயிரணுவை சேமித்து வைத்தால், ஏதேனும் அசம்பாவிதம் நேரிட்டாலும், அந்த உயிரணுவைக் கொண்டு குழந்தை பெற்றுக் கொள்ளலாம். ஆனால், அதற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதியளிக்காமல், சம்பந்தப்பட்ட நபரின் கைப்பட எழுதிய அனுமதிக் கடிதமோ, நீதிமன்ற உத்தரவோ இல்லாமல் இதைச் செய்ய இயலாது என்று கூறியிருப்பதாகத் தெரிவித்திருந்தார்.