கரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு தோல் நோய்கள்: நிபுணர்கள்
கரோனாவிலிருந்து மீண்டவர்களில் சிலருக்கு தோல் நோய்கள், தலைமுடி உதிர்வது, விரல் நகங்களில் பாதிப்பு ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
புது தில்லி: கரோனாவிலிருந்து மீண்டவர்களில் சிலருக்கு தோல் நோய்கள், தலைமுடி உதிர்வது, விரல் நகங்களில் பாதிப்பு ஏற்படுவது போன்ற பிரச்னைகள் ஏற்படுவதாக தோல் நோய் சிறப்பு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தில்லி, மும்பை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், கரோனாவிலிருந்து மீண்டவர்கள் தோல் நோய் பாதிப்புக்கு சிகிச்சை பெறுவது அதிகரித்திருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, கரோனாவுக்கு சிகிச்சை பெற்று குணமடைந்தவர்கள் தங்களுக்கு ஏதேனும் தோல் பிரச்னைகள் ஏற்படுகிறதா என்பதை கவனித்து அது தீவிரமடையும்பட்சத்தில் உடனடியாக சிகிச்சை பெற மருத்துவர்கள் சார்பில் அறிவுறுத்தப்படுகிறது.
தில்லியில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவர் மஹாஜன் கூறுகையில், கரோனா பாதித்து குணமடைந்தவர்கள் பலரும் தோல் பிரச்னைகளுக்காக மருத்துமனைக்கு விரைகிறார்கள். தங்களுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என்று அச்சம் கொள்கிறார்கள்.
ஆனால், கரோனாவிலிருந்து மீண்டவர்கள் சிலருக்கு தோல் பிரச்னை ஏற்படுவது அல்லது ஏற்கனவே இருந்த தோல் பிரச்னை தீவிரமடைவதையும் காண முடிகிறது. அவர்களது நோய் எதிர்ப்பு சக்தி குறைவதே இதற்குக் காரணமாக இருக்கிறது என்கிறார்.
இதுபோலவே, சிலருக்கு தலைமுடி உதிர்வு, விரல் நகங்களில் பிரச்னை போன்றவை ஏற்படுவதாகவும், இதற்கு உறுதியான காரணம் கண்டறியப்படாவிட்டாலும், இது பரவலாக ஏற்படுவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.