புதுச்சேரியில் கரோனா நிவாரணத்தொகை குடும்ப அட்டைதாரர்கள் வங்கிக்கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியது
புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்த கரோனா நிவாரணத்தொகையின், முதல் தவணை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுச்சேரி: புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்த கரோனா நிவாரணத்தொகையின், முதல் தவணை குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனா பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் தலா ரூ.3,000 நிவாரணத்தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் என்.ரங்கசாமி அறிவித்தார். கடந்த மே 26-ஆம் தேதி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்பின்போது, இதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிட்டார்.
இதனையடுத்து ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டு, உரிய நிதி ஆதாரங்கள் திரட்டப்பட்டு, கரோனா நிவாரணத்தொகை, பொதுமக்கள் வங்கிக் கணக்கில் செலுத்தும் பணி தொடங்கியது.
அதன்படி, கரோனா நிவாரணத்தொகையின் முதல் தவணை ரூ.1,500, குடும்ப அட்டைதாரர்களின் வங்கிக்கணக்கில், செவ்வாய்க்கிழமை முதல் செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் உள்ள 3 லட்சத்து 46 ஆயிரத்து 388 குடும்ப அட்டைதாரர்களுக்கும், முதல் தவணையாக ரூ.1500 வீதம் இரு தினங்களாக செலுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, ரூ.51 கோடியே 96 லட்சத்து 32,000 அளவில் தொகை செலுத்தப்பட்டு உள்ளதாக அரசுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதல் தவணைத் தொகை ரூ.1500 வங்கி கணக்கில் பெறப்பட்ட பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விரைவில் இரண்டாவது தவணை செலுத்தப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.