முகப்பு
இந்தியா

கரோனா தடுப்பூசியை உகந்த வழியில் பயன்படுத்துங்கள்! மாநிலங்களுக்கு மத்திய அரசு வேண்டுகோள்

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான கருவியான தடுப்பூசியை உகந்த வழியில் நியாயமாகப் பயன்படுத்த வேண்டும் என

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:23 AM
பகிர்:

கரோனா நோய்த் தொற்றுக்கு எதிரான கருவியான தடுப்பூசியை உகந்த வழியில் நியாயமாகப் பயன்படுத்த வேண்டும் என மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய சுகாதாரத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.

தடுப்பூசி வீணாகும் விகிதத்தை 1 சதவீதத்திற்கும் குறைவாக வைத்திருக்க மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை வலியுறுத்தியதாக வந்துள்ள செய்திகளை மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை மறுத்துள்ளது. ‘இது நம்பத்தகாதது மற்றும் விரும்பத்தகாதது’ என அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடா்பாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: கரோனா நோய்த் தொற்றை எதிா்த்துப் போராடும் தடுப்பூசி மருந்துகள் வீணாவதைக் கட்டுபடுத்த மத்திய அரசு முன்னேச்சரிக்கையுடன் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழிகாட்டி வருகிறது. கடந்த நூற்றாண்டில் இல்லாத நிகழ்வாக கரோனா நோய்த் தொற்று உள்ளது. இந்த நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதும், உயிரிழப்புகளைத் தவிா்ப்பதும் முக்கியமானதாகும். இதற்குப் பாதுகாப்பான, பயனுள்ள தடுப்பூசிகள் முக்கியமானவையாகும்.

இந்த நிலையில், இந்தத் தடுப்பூசியை உகந்ததாகவும் நியாயமாகவும் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கண்காணித்து உறுதிபடுத்த வேண்டும். உலகளவில் பற்றாக்குறையுடன் கூடிய பொது சுகாதாரப் பொருளாக தடுப்பூசி உள்ளது. எனவே, இவை வீணாவதைக் குறைக்க வேண்டும். இதன் மூலம் பலருக்கு தடுப்பூசி போட முடியும். இதுவே கரோனாவிற்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தும். கொவைட்-19 தடுப்பூசி நுண்ணறிவு வலையமைப்பு (கோ-வின்), மின்னணு தடுப்பூசி நுன்ணறவு வலையமைப்பு ( இ-வின்) ஆகியவை இணைக்கப்பட்டு இந்தியாவில் கரோனா தடுப்பூசி அளிக்கும் முறை செயல்படுத்தப்படுகிறது. இந்த மின்னணு தளம், பயனாளிகள் பதிவு செய்து கொள்வதற்கு மட்டுமல்லாமல், தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டவை மற்றும் வீணாக்கப்பட்டவை அகியவற்றையும் கண்காணிக்கும். மேலும், அதன் சேமிப்பகங்களை நிகழ் நேரத்தில் கண்காணிக்கவும் உதவுகிறது.

Advertisement

தடுப்பூசி குப்பிகளுக்கு பொதுவான கொள்கை ஏதும் கிடையாது. இருப்பினும் திறக்கப்பட்டதும் அனைத்து தடுப்பூசி குப்பிகளையும் 4 மணி நேரத்திற்குள் பயன்படுத்த வேண்டும். பல மாநிலங்களில் இவ்வாறு தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வீணாகாமல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, தடுப்பூசி வீணாவது ஒரு சதவீதம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு நியாயமற்றது. ஒவ்வொரு தடுப்பூசி முகாம்களிலும் குறைந்தது 100 பயனாளிகள் இருக்க அனைத்து மாநில அரசுகளிடமும் கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், தொலைதூரங்களில் மக்கள்தொகை குறைவாக உள்ள பகுதிகளில் போதுமான பயனாளிகள் இருக்கும்பட்சத்தில் முகாமைத் திட்டமிட்டு ஏற்பாடு செய்வதன் மூலம் தடுப்பூசி வீணாகாமல் பாதுகாக்கப்படும். இது தொடா்பாக மாநிலங்களுக்கு வழிகாட்டப்பட்டுள்ளன. கொவைட் - 19 தடுப்பூசி திட்டத்தில் அனைத்து நிலைகளிலும் பகுப்பாய்வு செய்யப்பட்டு தவறுகளை அடையாளம் கண்டு கவனம் செலுத்த வேண்டும். மாநிலங்களில் உள்ள சம்பந்தப்பட்ட தடுப்பூசி மைய மேலாளா்கள் திறம்பட திட்டமிடுதல் மூலம் தடுப்பூசி வீணாக்கப்படுவது குறைக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments