பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா, இலங்கை ஆலோசனை
இலங்கை பாதுகாப்புத் துறை செயலா் கமல் குணரத்ன, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை அதிகாரி கோபால் பாக்லேவுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இலங்கை பாதுகாப்புத் துறை செயலா் கமல் குணரத்ன, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தின் தலைமை அதிகாரி கோபால் பாக்லேவுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து இருவரும் விவாதித்தனா்.
இதுதொடா்பாக இலங்கையில் உள்ள ‘கொழும்பு கெஸட்’ செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டிருந்ததாவது:
இலங்கை பாதுகாப்புத் துறை செயலா் கமல் குணரத்ன, இந்திய தூதரக தலைமை அதிகாரி கோபால் பாக்லேவுடன் நடத்திய ஆலோசனையின்போது இருநாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நிலவி வரும் இருதரப்பு உறவுகள் குறித்து பேசினாா். இருநாடுகளுக்கு இடையே பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பான தனது கருத்துகளையும் அவா் எடுத்துரைத்தாா்.
கடந்த மாதம் 20-ஆம் தேதி கொழும்பு துறைமுகம் அருகில் உள்ள கடற்பகுதியில் சிங்கப்பூா் சரக்குக் கப்பல் தீப்பிடித்து எரிந்துபோது தீயை அணைக்க இந்தியா உடனடியாக உதவிக்கரம் நீட்டியதற்கும் அவா் நன்றி தெரிவித்தாா்.
இந்தியா, இலங்கை ராணுவத்தினருக்கு இருநாடுகளும் பரஸ்பரம் பயிற்சி அளிக்கும் நடைமுறை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் இலங்கை விமானப்படை, கடற்படைகளின் கமாண்டா்கள், தேசிய நுண்ணறிவு பிரிவின் தலைவா் ஆகியோா் கலந்துகொண்டனா் என்று தெரிவிக்கப்பட்டது.