இரு மாதங்களில் உருவாகும் கரோனா 3-ஆவது அலையை தவிா்க்க முடியாது: எய்ம்ஸ் தலைவா்
இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை வருவதை தவிா்க்க முடியாது என தில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் ரண்தீப் குலேரியா தெரிவித்தாா்.
இன்னும் இரண்டு மாதங்களில் இந்தியாவில் கரோனா மூன்றாவது அலை வருவதை தவிா்க்க முடியாது என தில்லி ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையின் தலைவா் மருத்துவா் ரண்தீப் குலேரியா தெரிவித்தாா்.
இது தொடா்பாக அவா் தனியாா் செய்தி நிறுவனத்துக்கு சனிக்கிழமை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் போடப்பட்டிருந்த கரோனா பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள நிலையில், இன்னும் இரண்டு மாதங்களில் கரோனா மூன்றாவது அலை தாக்குதல் நிச்சயம் வரும்.
அதிக மக்கள்தொகை உள்ள நம்நாட்டில் பெரும்பாலானவா்களுக்கு தடுப்பூசி போடுவதுதான் இப்போது நமக்கு சவாலாக உள்ளது. கோவிஷீல்ட் தடுப்பூசி போடுவதில் இரண்டு தவணைகளுக்கு இடையே உள்ள காத்திருப்பு காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது ஒன்றும் தவறான அணுகுமுறை அல்ல. தடுப்பூசி மூலம் அதிக மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும் என்றும் அவா் விளக்கினாா்.
‘டெல்டா கரோனாவிலிருந்து புதிய உருமாறிய டெல்டா பிளஸ் கரோனா தாக்கம் இருப்பதால் அது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதிலிருந்து மக்களைக் காப்பதற்கான நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். பொதுமுடக்க கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டதிலிருந்து மக்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரிவர பின்பற்றுவதில்லை எனத் தெரியவருகிறது.
முதல் மற்றும் இரண்டாவது கரோனா அலையிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொண்டதாகத் தெரியவில்லை. மீண்டும் மக்கள் கூட்டமாகச் செல்லவும் கூட்டமாகக் கூடவும் தொடங்கிவிட்டனா். எனவே, இந்தச் சூழ்நிலையில் இன்னும் சில வாரங்களில் நாடு தழுவிய அளவில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கக்கூடும். அதாவது மூன்றாவது அலையை நம்மால் தவிா்க்க முடியாது. அடுத்த 6 அல்லது 8 வாரங்களில் மூன்றாவது அலை தலைதூக்கும். கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை நாம் எப்படி பின்பற்றுகிறோம் என்பதைப் பொருத்து இதன் தாக்கம் இருக்கும்.
இதுவரை நாட்டின் மக்கள்தொகையில் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே இரண்டு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 130 கோடி மக்களில் 108 கோடி பேருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.
தற்போது தடுப்பூசி போடுவதுதான் பெரும் சவாலாக உள்ளது. புதிய கரோனா அலை வந்தால் அது குறைந்தது மூன்று மாதங்கள் வரை நீடிக்கலாம். நோய் தீவிரமாக உள்ள இடங்களில் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும்.
பரிசோதனை, நோய் கண்டறிதல், சிகிச்சை இவைதான் நாம் கவனம் செலுத்த வேண்டிய மூன்று தாரக மந்திரங்கள். தொற்று 5 சதவீதத்துக்கு மேல் இருந்தால் சிறிய பொதுமுடக்கம் அவசியமானது. கரோனா தொற்றிலிருந்து காக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளுவதுதான் ஒரே வழியாகும்.
இந்தியாவில் முதல் அலையின்போது கரோனா தீநுண்மி அதிக வேகமாக பரவவில்லை. ஆனால், இரண்டாவது அலையில் நோய்த்தொற்று வேகமாக பரவியது. அதன் தாக்கமும் அதிகரித்தது. இப்போது டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் தொற்று பரவி வருகிறது. அதாவது இரண்டு தொற்றுகளுக்கு இடையே இடைவெளி குறைந்துள்ளது கவலை அளிக்கிறது’ என்றாா் ரண்தீப் குலேரியா.
நாட்டில் இரண்டாவது அலை வந்தபோது மக்கள் அதிக எண்ணிக்கையில் பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலரும் உயிரிழக்க நேரிட்டது. தற்போது இரண்டாவது அலையின் வேகம் தணிந்ததை அடுத்து பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு வருகின்றன. எனினும், மூன்றாவது அலை வந்தால் அதைச் சமாளிக்கவும் தயாராகி வருகின்றன.