சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இழப்பீடாக மாநிலங்களுக்கு ரூ.30,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது.
இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘நிகழ் நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூலில் ஏற்பட்ட பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கு கடந்த 27-ஆம் தேதி மாநிலங்களுக்கு ரூ.30,000 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு விடுவிக்கப்பட்டது. இந்த நிதியாண்டில் ஜிஎஸ்டி இழப்பீடாக இதுவரை மாநிலங்களுக்கு ரூ.70,000 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதனுடன் ரூ.28,000 கோடி ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியும் செலுத்தப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி இழப்பீட்டில் ரூ.63,000 கோடி பாக்கி உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஜிஎஸ்டியின் கீழ் 5%, 12%, 18%, 28% என 4 விகிதங்களில் வரி வசூலிக்கப்படுகின்றன. ஆடம்பரப் பொருள்கள், புகையிலை, மதுபானங்கள் உள்ளிட்டவற்றுக்கு அதிகபட்ச வரி விகிதத்துடன் செஸ் வரியும் விதிக்கப்படுகிறது.