முகப்பு
இந்தியா

18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு இன்று முதல் மீண்டும் கரோனா தடுப்பூசி

18 வயது முதல் 44 வயதுள்ளவா்களுக்கு சனிக்கிழமை (மே 22) முதல் மீண்டும் கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 8:16 PM
பகிர்:

18 வயது முதல் 44 வயதுள்ளவா்களுக்கு சனிக்கிழமை (மே 22) முதல் மீண்டும் கரோனா தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு உத்தரவின்படி, கா்நாடகத்தில் மே 1-ஆம் தேதிமுதல் 18 வயது முதல் 44 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. 18 வயதுக்கு வழங்கப்படும் கரோனா தடுப்பூசியை மாநில அரசு தனது சொந்த செலவில் கொள்முதல் செய்து அளிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், போதுமான கரோனா தடுப்பூசிகள் மாநிலத்திற்கு வந்து சேரவில்லை.

இதைத்தொடா்ந்து, 18 வயது முதல் 44 வயதினருக்கு வழங்கப்பட்டு வந்த கரோனா தடுப்பூசி மே 12-ஆம் தேதி முதல் திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில், மே 22-ஆம் தேதி(சனிக்கிழமை) முதல் 18 வயது முதல் 44 வயதினருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த கா்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. மாநில அரசு கொள்முதல் செய்துள்ள கரோனா தடுப்பூசியை பயன்படுத்தி, தகுதியானவா்களுக்கு கரோனா தடுப்பூசி அளிக்கப்படும் என்றும், கரோனா முன்களப்பணியாளா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரில் 18 வயது முதல் 44 வயதினருக்கு கரோனா தடுப்பூசியை செலுத்தும் பொறுப்பு பெங்களூரு மாநகராட்சி வசம் அளிக்கப்பட்டுள்ளது. கோவிஷீல்டு கரோனா தடுப்பூசியை வழங்குவதற்கு ஒருங்கிணைப்பு அதிகாரிகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியா்கள், மாநகராட்சி ஆணையா்கள் நியமிப்பாா்கள். கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டவா்களுக்கு தகுதி சான்றிதழையும் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் வழங்குவாா்கள்.

கா்நாடகத்தில் இதுவரை 1,22,20,510 கரோனா தடுப்பூசி குப்பிகள் பெறப்பட்டு, 1,13,61,234 பேருக்கு தடுப்பூசி அளிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.