முகப்பு
இந்தியா

லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் சுடப்பட்டனரா? சந்தேகத்தை உறுதிப்படுத்திய தடயவியல் முடிவுகள்

லக்கிம்பூர் கெரி சம்பவம் நடைபெற்றுபோது அங்கிருந்தவர்களின் கூற்றுப்படி, துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

Updated On : 10 நவம்பர், 2021 at 2:19 PM
லக்கிம்பூர் கெரி
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 10:03 AM

உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கெரியில், கடந்த மாதம் அக்டோபர் 3 ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது கார் ஏற்றப்பட்ட சம்பவத்திலும் அதை தொடர்ந்து நடந்த கலவரத்திலும் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா உட்பட 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சிகள் அழுத்தம் தரவே காவல் துறையினர் ஆசிஷ் மிஸ்ராவை கைது செய்த சிறையில் அடைத்தனர்.

அஜய் மிஸ்ராவுக்கு சொந்தமான மகேந்திரா தார் எஸ்யூவி உள்பட 3 வாகனங்கள் ஏறியதில் தான் விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆனால், சம்பவத்தில் இருந்தவர்களின் கூற்றுப்படி, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக கருதப்படுகிறது. 

Advertisement

ஆனால், இறந்த 8 பேரின் உடலிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான அறிகுறிகள் இல்லை என்று தான் உடற்கூராய்வு முடிவுகள் தெரியவந்தன. 

இருப்பினும், உத்தரப் பிரதேச காவல் துறையின் சிறப்பு புலனாய்வுக் குழு சிறையில் அடைக்கப்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றிய நான்கு துப்பாக்கிகளையும் தடய அறிவியல் ஆய்வகத்திற்கு (FSL) அனுப்பி வைத்தனர்.

அதன் ஆய்வக முடிவில், ஆசிஷின் துப்பாக்கி, முன்னாள் மத்திய அமைச்சர் அகிலேஷ் தாஸின் மருமகன் அங்கித் தாஸின் துப்பாக்கி மற்றும் தாஸின் பாதுகாவலர் லத்தீஃப் வைத்திருந்த துப்பாக்கி ஆகியவற்றிலிருந்து தோட்டாக்கள் வெளியானது உறுதியாகியுள்ளது. 

இதுகுறித்து மூத்த காவல் துறை அலுவலர் கூறுகையில், "நான்காவது துப்பாக்கி தொடர்பான ஆய்வக முடிவுகள் இதுவரை வரவில்லை. ஆனால், மூன்று துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் சுடப்பட்டதை தடய அறிவியல் அறிக்கை உறுதி செய்துள்ளது. இந்த அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது. 

அதே சமயம், துப்பாக்கிகளிலிருந்து தோட்டாக்கள் வெளியாகியிருந்தாலும், எந்த தேதியில் வெளியானது என்பது ஆய்வக முடிவில் தெரியவில்லை. தற்போது, சிறையில் உள்ள குற்றவாளிகள் தகுந்த ஆதாரத்துடன் தோட்டாக்கள் அக்டோபர் 3 ஆம் தேதி சுடப்படவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்" என்றார்.

இந்த தடய அறிவியல் அறிக்கையால், தனது மகன் வன்முறை நிகழ்ந்த இடத்தில் இல்லை எனக் கூறி வந்த அமைச்சருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆரம்பம் முதலே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக விவசாயிகள் கூறிவந்த நிலையில், அவர்களது புகாரை ஆய்வக முடிவு பலப்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.