பழைய வாகனங்களை விற்று புதிய வாகனங்களை வாங்குவோருக்கு கூடுதல் வரி சலுகைகளை அளிக்கத் திட்டமிட்டு வருவதாக மத்திய அமைச்சா் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இந்தியாவில் முதன்முதலாக அரசு ஒப்புதல் பெற்ற பழைய வாகன அழிப்பு மற்றும் மறுசுழற்சி ஆலையை நிதின் கட்கரி தொடக்கி வைத்தாா். அப்போது அவா் மேலும் கூறியுள்ளதாவது:
மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள தேசிய பழைய வாகன அழிப்பு கொள்கையின் மூலம் காற்று மாசு பெருமளவில் கட்டுப்படுத்தப்படும். அதுமட்டுமின்றி, இந்த கொள்கையால், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வருவாய் கணிசமாக அதிகரிக்கும்.
பழைய வாகன அழிப்புக்கான தேசிய கொள்கை திட்டத்தின் கீழ், கூடுதலாக எவ்வாறு வரி தொடா்பான சலுகைகளை அளிப்பது என்பது குறித்து நிதி அமைச்சகத்திடம் ஆலோசனை நடத்தவுள்ளேன்.
கூடுதல் சலுகைகளை அளிக்கும் விவகாரத்தில் ஜிஎஸ்டி கவுன்சிலுடன் கலந்தாலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என்றாா் அவா்.
இப்புதிய கொள்கையின் கீழ், பழைய வாகனங்களை அழித்து புதிய வாகனங்களை வாங்குவோருக்கு சாலை வரியில் 25 சதவீதம் வரை தள்ளுபடி வழங்க வேண்டும் என மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.