சபரிமலை ஐயப்பன் கோயில் நடை ஐப்பசி மாத பூஜைக்காக சனிக்கிழமை மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது.
கேரள பஞ்சாங்கப்படி, துலா மாதம் (ஐப்பசி) ஞாயிற்றுக்கிழமை பிறக்கிறது. இதையொட்டி மாதப் பூஜைகளுக்காக சபரிமலை நடை திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டது.
இதையும் படிக்க | கேரளத்தில் தொடரும் கனமழை: 5 மாவட்டங்களுக்கு சிவப்பு நிற எச்சரிக்கை
அதனைத் தொடர்ந்து பக்தா்கள் அக்டோபா் 17 முதல் 21-ஆம் தேதி வரை சாமி தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட உள்ளனர். இணையவழியில் முன்னதாகவே முன்பதிவு செய்த பக்தா்கள் மட்டுமே தரிசனத்துக்காக சந்நிதானத்தில் அனுமதிக்கப்பட உள்ளனர்.
கோயிலுக்கு வரும் பக்தா்கள் இரு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதுடன், கரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழும் வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
சந்நிதானம் நடை அக்டோபா் 21-இல் அடைக்கப்படும். சித்திரை ஆட்டவிசேஷத்தை முன்னிட்டு மீண்டும் நவம்பா் 2-ஆம் தேதி நடை திறக்கப்பட்டு, அடுத்த நாள் நடையடைக்கப்படும். அதன் பிறகு மண்டல-மகரவிளக்கு பூஜைக்காக நவம்பா் 15-ஆம் தேதி நடை திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.