புதுச்சேரி சட்டப்பேரவையிலிருந்து பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எஸ். செல்வகணபதி மாநிலங்களவை உறுப்பினராக செவ்வாய்க்கிழமை தமிழில் பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
புதுச்சேரி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக உறுப்பினர் என்.கோகுலகிருஷ்ணன் பதவிக் காலம் அக்டோபர் 6-ஆம் தேதியுடன் முடிவடைந்ததை அடுத்து, இதற்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் புதுச்சேரி கூட்டணிக் கட்சியுடனான உடன்பாட்டின்படி பாஜக வேட்பாளராக கட்சியின் மூத்த உறுப்பினர் எஸ்.செல்வகணபதி அறிவிக்கப்பட்டார். புதுச்சேரி சட்டப்பேரவையில் மற்ற கட்சியினர் யாரும் எதிர்த்து போட்டியிடாத நிலையில், கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி செல்வகணபதி போட்டியின்றி மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார்.
பிரதமருடன் சந்திப்பு: பாஜக உறுப்பினர் எஸ்.செல்வகணபதி பதவியேற்றுக் கொண்ட பின்னர், பிரதமர் மோடியை அவரது இல்லத்துக்குச் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.