முகப்பு
இந்தியா

ம.பி.: சாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு

நடனமாடிய பெண்ணின் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அப்பெண் மீது போக்குவரத்துக் காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:09 AM
ம.பி.: சாலையின் நடுவே நடனமாடிய பெண் மீது வழக்கு
பகிர்:


இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையின் குறுக்கே, நடனமாடிய பெண்ணின் விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அப்பெண் மீது போக்குவரத்துக் காவலர்கள் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஷ்ரேயா கல்ரா என்ற அப்பெண் மீது இந்திய தண்டனைச் சட்டம் 290ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி கூறியுள்ளார்.

ரசோமா சதுக்கத்துக்கு அருகே, சாலைகள் சந்திப்புப் பகுதியில், சிவப்பு விளக்குப் போட்டதும், வாகனங்கள் நின்றுவிட்டன. அப்போது கருப்பு நிற உடை அணிந்து கொண்டு, தலை மற்றும் முகத்தை மூடியபடி ஓடி வந்த ஒரு இளம்பெண், ஆங்கிலப் பாடலை இசைத்தபடி நடனமாடினார்.

இந்த விடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அப்பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஷ்ரா உத்தரவிட்டார்.

உடனடியாக நடவடிக்கையில் இறங்கிய காவல்துறையினர், ஷ்ரேயா கல்ராவைக் கண்டுபிடித்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்தக் குற்றத்துக்காக அவருக்கு ரூ.200 அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த விடியோ சர்ச்சையானதைத் தொடர்ந்து, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், சிவப்பு விளக்குப் போட்டதும் வாகன ஓட்டிகள் அதனைப் பின்பற்றி நிற்க வேண்டும் என்றும், அப்போதுதான் பாதசாரிகள் சாலையைக் கடக்க முடியும் என்றும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே நடனமாடியதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

அவரது எண்ணம் சிறந்ததாக இருந்தாலும் கூட, அதற்காக அவர் கையாண்ட முறை தவறானது என்றும், இதுபோன்ற நடவடிக்கையில் அவர் மீண்டும் ஈடுபட்டால் கடும் தண்டனை வழங்கப்படும் என்றும் அமைச்சர் மிஷ்ரா பதிலளித்துள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.