மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, சமீபத்தில் மத்திய அரசின் திட்டங்களை ஆய்வு செய்தவதற்காக அருணாச்சலப் பிரதேசத்திலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றுள்ளார். கஜலாங் கிராமத்திற்குச் சென்ற அவரை அப்பகுதியில் வசித்து வரும் சஜோலாங் இன மக்கள், ஆட்டம் பாட்டத்துடன் வரவேற்றுள்ளனர்.
அப்போது கிரண் ரிஜிஜூவும் அவர்களுடன் சேர்ந்து ஆட்டகாசமாக நடனமாடியுள்ளார். இது தொடர்பான விடியோ சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது. சுமார் ஒரு நிமிடம் வரை நீடிக்கும் அந்த விடியோவில் கிரண் ரிஜிஜூ, மேள தாளங்களுக்கு ஏற்ப பாரம்பரிய நாட்டுப்புறப் பாடல்களுக்கு அசத்தலான நடனம் மேற்கொண்டு மக்களை கவர்ந்துள்ளார்.
இது தொடர்பாக கிரண் ரிஜிஜூ ட்விட்டரில், "விவேகானந்தா கேந்திரா வித்யாலயா திட்டங்களைப் பார்வையிட அழகிய கஜலாங் கிராமத்திற்கு நான் சென்றிருந்தேன்.
விருந்தினர்களாக யார் கிராமத்திற்கு வந்தாலும், சஜோலாங் இன மக்கள் அவர்களை மகிழ்ச்சியுடன் இப்படி தான் வரவேற்பார்கள். இதுபோன்ற நாட்டுப்புறப் பாடல்களும் நடனங்களும் தான் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்கும் முக்கியமானவை" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | பிரச்னையை பேசி தீர்த்து கொள்வோம்: நவ்ஜோத் சிங் சித்துவுக்கு அழைப்பு விடுத்த பஞ்சாப் முதல்வர்
கிரண் ரிஜிஜூ நடனமாடும் விடியோ இணையத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தனது பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "நமது சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு நல்ல ஒரு நடன கலைஞரும் கூட! அருணாச்சலப் பிரதேசத்தின் துடிப்பான மற்றும் புகழ்பெற்ற கலாசாரத்தைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.