புது தில்லி: சரக்கு வாகனங்கள் மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சாலையில் ஓடுவதற்குத் தகுதி உடையவையாக உள்ளனவா என்ற பரிசோதனை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தானியங்கி நிலையங்கள் மூலம் கட்டாய பரிசோதனை செய்யப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பொதுவாக வாகனங்களும் முதல் 15 ஆண்டுகள் முடிந்த பிறகு அவை சாலையில் இயக்குவதற்கு தகுதியுடன் உள்ளதா என்பதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பரிசோதித்து உறுதி செய்து கொள்வது அவசியம். இதன் பிறகு ஒவ்வொரு வாகனங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட சில ஆண்டுகள் இடைவெளியில் இந்த தகுதி சோதனை நடத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் இது தொடா்பாக ஓா் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ‘அதிக சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மற்றும் அதிக பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் தானியங்கி நிலையங்கள் மூலம் தகுதி பரிசோதனை நடத்தப்படும்.
அதேபோல இதற்கு அடுத்த கட்டமாக சற்று குறைந்த அளவிலான சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள், குறைந்த எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், பிற போக்குவரத்து வாகனங்களுக்கு 2024 ஜூன் 1-ஆம் தேதி முதல் தானியங்கி நிலையங்களில் வாகனத் தகுதி பரிசோதனை நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும். இந்த தானியங்கி நிலையங்களில் நடைபெறும் சோதனைகளில் தோ்ச்சி பெறும் வாகனங்கள் மட்டுமே சாலையில் பயன்படுத்த அனுமதிக்கப்படும்.
வா்த்த கரீதியாக போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் வாகனங்கள் 15 ஆண்டுகளுக்குப் பின் இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை என அடுத்த 8 ஆண்டுகளுக்கு பரிசோதிக்கப்படும். அதன் பிறகு ஆண்டுதோறும் அந்த வாகனங்களை தகுதி சோதனைக்கு உள்படுத்துவது கட்டாயமாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.