பெங்களூரு: இணைய மோசடி குறித்து பல எச்சரிக்கைகளை அறிந்திருப்பவரும், மற்றவர்களை ஏமாறாமல் இருக்குமாறு அறிவுறுத்தவேண்டியவருமான வங்கி முன்னாள் மேலாளர் ஒருவர் இணைய மோசடியில் ரூ.3 லட்சத்தை இழந்துள்ளார்.
செல்லிடப்பேசியில் வந்த ஒரு குறுந்தகவலுக்கு பதிலளித்து, இன்று இணைய மோசடிக்கு ஆளானவராக மாறியுள்ளார்.
பெங்களூருவில் கனகபுரா சாலைப் பகுதியில் வசித்து வருகிறார் 60 வயது சுஜாதா ராம்குமார். இவர் அங்கிருக்கும் ஒரு வங்கியில் கணக்கு வைத்திருக்கிறார். கடந்த திங்கள்கிழமை மாலை 6.14 மணிக்கு இவருக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது.
அதில், உங்களதுவங்கிக் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாகவும், இந்த இணைப்பில் வந்து தகவல்களை அளித்து வங்கிக் கணக்கை மீட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதை நம்பி அவர் அந்த இணையப் பக்கத்துக்குச் சென்று தனது வங்கி கணக்கு தொடர்பான விவரங்களை அளித்துள்ளார். பிறகு ஒரு ஓடிபி வந்துள்ளது. அதையும் அதே இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதையெல்லாம் அவர் செய்யும்போது மாலை 6.26 மணியிருக்கும். சரியாக 6.35 மணிக்கு அதாவது 9 நிமிடத்தில், அவரது வங்கிக் கணக்கிலிருந்த ரூ.3.04 லட்சம் காலியாகிவிட்டது. இது குறித்து அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மூன்று முறை பணப்பரிவத்தனை முறையில் வங்கிக் கணக்கிலிருந்து பணம் திருடப்பட்டுள்ளது. அது குறித்து தகவல்கள் வரும்போதுதான், தான் ஏமாற்றப்பட்டதை சுஜாதா அறிந்துள்ளார்.
அடையாளத் தெரியாத எண்ணிலிருந்து வந்த தகவலுக்கு பதிலளித்ததே மிகப்பெரிய தவறு. அப்படியே தகவல் வந்ததைப் பார்த்ததும், உடனடியாக இணைய வங்கிச் சேவையை முயற்சித்துப் பார்த்திருக்கலாம். அதில் வங்கிக் கணக்கு வேலை செய்கிறதா என்பதை உறுதி செய்து கொண்டிருக்கலாம் என்கிறார்கள் அதிகாரிகள்