தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கய்யா பிறந்த நாள்: குடியரசு துணைத் தலைவர், பிரதமர் புகழாரம்
நாட்டின் தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கய்யாவின் பிறந்த நாளையொட்டி (ஆகஸ்ட் 2) குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர்
நாட்டின் தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கய்யாவின் பிறந்த நாளையொட்டி (ஆகஸ்ட் 2) குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் செவ்வாய்க்கிழமை அவரை நினைவு கூர்ந்து புகழாரம் சூட்டியுள்ளனர்.
சுதந்திரத்தின் அமுதப் பெருவிழா (75-ஆவது சுதந்திர தினம்) ஆண்டை முன்னிட்டு, மூவர்ண ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றும் "ஹர்கர் திரங்கா' பிரசாரத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் 13 முதல் 15-ஆம் தேதி வரை ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றவும் பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இதற்கிடையே தேசியக் கொடியை வடிவமைத்த பிங்காலி வெங்கய்யாவையும் நாடு நினைவுகூர்ந்து வருகிறது. இத்தோடு ஆகஸ்ட் 2- ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) பிங்காலி வெங்கய்யாவின் பிறந்த நாளாகும்.
குடியரசுத் துணைத் தலைவர்: பிங்காலி வெங்கய்யாவின் பிறந்த நாளையொட்டி, குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, அவரை டிவிட்டரில் நினைவு கூர்ந்தார். "நமது தேசியக் கொடியை வடிவமைத்தவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிங்காலி வெங்கய்யா பிறந்த நாளை நினைவுகூர்கின்றோம். அவர் ஒரு உயர்ந்த சிந்தனையாளர். தீவிர தேசியவாதியாகவும், உண்மையான காந்தியவாதியாகவும் இருந்தார். தேசியக் கொடியை வடிவமைத்ததற்காக அவருக்கு தேசம் என்றும் நன்றியுடன் இருக்கும்' என்று பதிவு செய்துள்ளார்.
பிரதமர் மோடி: இதேபோன்று பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பதிவில், "மாமனிதர் பிங்காலி வெங்கய்யாவின் பிறந்த நாளில் அவருக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். நாம் மிகவும் பெருமிதம் கொண்டுள்ள மூவர்ணக் கொடியை வழங்குவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காக நமது தேசம் என்றென்றும் அவருக்கு கடமைப்பட்டிருக்கும். மூவர்ணக் கொடியின் வலிமையையும், உத்வேகத்தையும் பெற்றுக்கொண்டு தேசத்தின் முன்னேற்றத்துக்காக தொடர்ந்து பாடுபடுவோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நாட்டின் ஒருமைப்பாடு, சுயமரியாதை ஆகியவற்றின் அடையாளமாக தேசியக் கொடியில் மூவர்ணத்தை உருவாக்கியவர் பிங்காலி வெங்கய்யா. தேச பக்தியின் நிறங்களுடன் தேசத்தை ஒன்றிணைக்க பாடுபட்டார். தேசத்துக்கான மகத்தான தியாகத்தில் தனது தனித்துவமான பங்களிப்பைச் செய்த அத்தகைய சிறந்த சுதந்திரப் போராட்ட வீரருக்கு அவரது பிறந்த நாளில் வணக்கம்' என தெரிவித்துள்ளர்.
சமூக ஊடக கணக்குகளில் தேசியக் கொடி: பிரதமர் வேண்டுகோள்
சுதந்திர தின பவள விழாவையொட்டி, தங்கள் சமூக ஊடக கணக்குகளில் தேசியக் கொடியை முகப்புப் படமாக நாட்டு மக்கள் வைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவு:
நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆம் ஆண்டு கொண்டாடப்படும் வேளையில், ஒவ்வொரு வீட்டிலும் மூவர்ணக் கொடி ஏற்றப்படுவதற்கு நாடு தயாராகி வருகிறது. எனது சமூக ஊடக கணக்குகளில் மூவர்ணக் கொடியை முகப்புப் படமாக வைத்துள்ளேன். அதையே நாட்டு மக்களும் செய்ய வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
இதே கோரிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமரின் வேண்டுகோள் மற்றும் மத்திய அரசின் "வீடுதோறும் மூவர்ணக் கொடி' பிரசாரத்தையொட்டி அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் தங்கள் சமூக ஊடக கணக்குகளில் மூவர்ணக் கொடியை முகப்புப் படமாக வைத்தனர்.
மூவர்ணக் கொடி பேரணி: தில்லியில் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "தில்லியில் செங்கோட்டை முதல் நாடாளுமன்றம் வரை புதன்கிழமை மூவர்ணக் கொடி இருசக்கர வாகன பேரணி நடைபெறவுள்ளது. மத்திய கலாசார அமைச்சகம் சார்பில் நடைபெறும் இந்தப் பேரணியில், அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் பங்கேற்க வேண்டும்' என்று கேட்டுக்கொண்டார்.