அடுத்த 3-4 நாட்களுக்குள், சிபிஐ-அமலாக்கத்துறை என்னைக் கைது செய்யலாம் என்றும் ஆனால் இதற்காக நாங்கள் பயப்படமாட்டோம் என்றும் தில்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறியுள்ளார்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த மணீஷ் சிசோடியா, 'அமெரிக்காவின் மிகப்பெரிய செய்தித்தாள் தி நியூயார்க் டைம்ஸ் தனது முதல் பக்கத்தில் தில்லியின் கல்வி மாதிரியை வெளியிட்டுள்ளது. இது இந்தியாவுக்கே பெருமை. ஆனால், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, கங்கை நதியில் ஆயிரக்கணக்கான உடல்கள் மிதந்த செய்தியை வெளியிட்டது. இது வெட்கக்கேடானது.
சிபிஐ அதிகாரிகள் எனது வீட்டிற்கு நேற்று வந்தனர். துணை முதல்வர் அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். அதிகாரிகள் நல்ல முறையில் நடந்துகொண்டார்கள். உயரதிகாரிகளின் உத்தரவுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. ஆனால் மிகவும் நேர்த்தியாக நடந்துகொண்டதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்.
அவர்களின் பிரச்சினை கலால் கொள்கை ஊழல் அல்ல. அவர்களின் பிரச்சனை அரவிந்த் கெஜ்ரிவால். என் வீடு, அலுவலத்தில் சோதனை மற்றும் எனக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் கேஜரிவாலை நிறுத்தவே நடைபெறுகிறது. நான் கேஜரிவாலின் கல்வி அமைச்சர். நான் எந்த ஊழலும் செய்யவில்லை.
எங்கள் கொள்கைகளை வெளிப்படைத்தன்மையுடனும் நேர்மையுடனும் பயன்படுத்துகிறோம். இந்த கொள்கையை மாற்றாமல் இருந்திருந்தால் தில்லி அரசுக்கு ஆண்டுதோறும் 10,000 கோடி ரூபாய் கிடைத்திருக்கும்.
அடுத்த 3-4 நாட்களுக்குள், சிபிஐ-அமலாக்கத்துறை என்னைக் கைது செய்யலாம். நாங்கள் பயப்பட மாட்டோம், உங்களால் எங்களை உடைக்க முடியாது. 2024 ஆம் ஆண்டு தேர்தல் போட்டி ஆம் ஆத்மிக்கும் பாஜவுக்குமானதாக இருக்கும்' என்று பேசினார்.
முன்னதாக, மதுபானக் கடைகளுக்கான உரிமம் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறி, தில்லி துணை முதல்வா் மணீஷ் சிசோடியா, ஐஏஎஸ் அதிகாரி, மூத்த அதிகாரிகளின் 30 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா். இந்த வழக்கில் 15 போ் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ள சிபிஐ, அதில் முதல் நபராக மணீஷ் சிசோடியாவை சோ்த்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.