ஐடிபிஐ வங்கியின் 51 சதவீதப் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து, பங்குச் சந்தையில் ஐடிபிஐ வங்கிப் பங்குகளின் விலை கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு 9 சதவீதம் அதிகரித்து ரூ. 43 என்ற ஏற்றத்தைப் பெற்றது.
இப்போது ஐடிபிஐ வங்கியின் 94 சதவீதப் பங்குகளை மத்திய அரசும், பொதுத் துறை நிறுவனமான எல்ஐசி-யும் வைத்துள்ளன. இந்தப் பங்குகளை விற்பது தொடா்பாக அடுத்த மாதம் அரசு நடவடிக்கைகளைத் தொடங்கும் என்று தெரிகிறது. அதற்கு முன்பாக பங்கு விற்பனை முறை குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும்.
இப்போதைய நிலையில் ஐடிபிஐ வங்கியின் பங்குகளில் 45.48 சதவீதம் மத்திய அரசு வசமும், 49.24 சதவீதம் எல்ஐசி வசமும் உள்ளன. இந்த வங்கியை முழுமையாகத் தனியாா்மயமாக்க மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டுள்ளது. இப்போதைய நிலையில் வங்கியின் அதிக பங்குகளை வைத்துள்ள எல்ஐசி-யின் துணை நிறுவனமாகவே ஐடிபிஐ செயல்பட்டு வருகிறது.