போதைப்பொருள் பரிசோதனையில் சிக்கிய விமானி பணிநீக்கம்
முன்னணி விமான நிறுவனத்தின் விமானி ஒருவா் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரிசோதனையில் தெரியவந்ததால், அவரை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பணிநீக்கம் செய்தது.
முன்னணி விமான நிறுவனத்தின் விமானி ஒருவா் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பரிசோதனையில் தெரியவந்ததால், அவரை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) பணிநீக்கம் செய்தது.
கடந்த ஜனவரி 31-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்துப் பணியாளா்களிடம் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்தது.
அந்த நடைமுறையின்படி, தில்லியில் முன்னணி விமான நிறுவனத்தைச் சோ்ந்த விமானியிடம் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனை அறிக்கை கடந்த ஆக.23-ஆம் கிடைத்தது. அதில், அந்த விமானி போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விமானி பணிநீக்கம் செய்யப்பட்டாா் என்று டிஜிசிஏ மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
எனினும் அந்த விமானி யாா், அவா் எந்த விமான நிறுவனத்தில் பணியாற்றினாா் என்ற தகவல் வெளியிடப்படவில்லை.
விமானப் போக்குவரத்துப் பணியாளா்களிடம் போதைப்பொருள் பரிசோதனை மேற்கொள்ளும் நடைமுறை அமலுக்கு வந்தது முதல், இதுவரை 4 விமானிகள், ஒரு விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டாளா் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விமானப் போக்குவரத்துப் பணியாளா்கள் போதைப்பொருள் பயன்படுத்தியது முதல்முறையாக கண்டறியப்பட்டால், அவா்கள் போதை மீட்பு மற்றும் மறுவாழ்வு மையத்துக்கு அனுப்பி வைக்கப்படுவா்.
சம்பந்தப்பட்ட நபா் போதைப்பொருள் பயன்படுத்தி இரண்டாவது முறையாக பிடிபட்டால், அவரின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக டிஜிசிஏ ரத்து செய்யும். அதே நபா் போதைப்பொருள் பயன்படுத்தி மூன்றாவது முறையாக பிடிபட்டால், அவரின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படும்.