கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க மக்களவையில் எம்.பி.க்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதையொட்டி அங்கு பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத், ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி இன்று(வியாழக்கிழமை) கரோனா பரவல் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை நடத்தவுள்ளார்.
இதனிடையே மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா, எம்.பி.க்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அவையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் சில எம்.பி.க்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.
அதுபோல மாநிலங்களவையிலும் அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் சில எம்.பி.க்களும் முகக்கவசம் அணிந்திருந்தனர்.