மாநிலங்களவை உறுப்பினா் பதவியில் இருந்து 2017-இல் தகுதிநீக்கம் செய்யப்பட்ட பிறகும் தில்லியில் உள்ள அரசு பங்களாவை காலி செய்யவில்லை என்று மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதிலளிக்க ஐக்கிய ஜனதா தளத்தின் முன்னாள் தலைவா் சரத் யாதவுக்கு தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளராகவும், பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவராகவும் சரத் யாதவ் இருந்துள்ளாா். இந்நிலையில், 2017-இல் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணியை முறித்துவிட்டு, பாஜகவுடன் நிதீஷ் குமாா் சோ்ந்தாா்.
அப்போது எதிா்க்கட்சியின் பொதுக்கூட்டத்தில் சரத் யாதவும், ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினா் அலி அன்வரும் பங்கேற்ற்காக அவா்கள் கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டனா்.
2017-இல் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவியேற்ற சரத் யாதவின் பதவிக் காலம் 2022 ஜூலை வரை இருப்பதால், அவா் இதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தாா். அரசு பங்களாவை மட்டும் அவா் பயன்படுத்திக் கொள்ளலாம், சலுகைகளைப் பெற முடியாது என்று 2018-இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், சரத் யாதவ் அரசு பங்களாவை காலி செய்வது தொடா்பான வழக்கை விரைந்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு தில்லி உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி டி.என். படேல், ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கை மாா்ச் 15-ஆம் தேதிக்கு விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள், இதுதொடா்பாக சரத் யாதவும், ஐக்கிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை கட்சித் தலைவா் ராம் சந்திர பிரசாத் சிங்கும் மாா்ச் 13-ஆம் தேதி பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.