முகப்பு
இந்தியா

அன்னை தெரசா அறக்கட்டளைக்கு மீண்டும் வழங்கப்பட்ட உரிமம்

கிறிஸ்துமஸ் தினத்தன்று, அன்னை தெரசா அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டிருந்த உரிமம் திரும்பபெறப்பட்டது பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:04 AM
கோப்புப்படம்
பகிர்:

வெளிநாடுகளிலிருந்து நிதி பெறுவதற்கான உரிமம், அன்னை தெரசா அறக்கட்டளைக்கு இன்று மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் இணையதளம் இதை உறுதிப்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் மிஷனரீஸ் ஆப் சாரிட்டி, அன்னை தெரசாவால் தொடங்கப்பட்ட அறக்கட்டளையாகும். இதன் வங்கி கணக்குகள் முடக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதன் வங்கி கணக்குகளை மத்திய அரசு முடக்கியுள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா குற்றம்சாட்டியிருந்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சகம், "வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின் கீழ அதற்கு வழங்கப்பட்ட உரிமம் கடந்த் அக்டோபர் 31ஆம் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. இருந்தபோதிலும், அந்த அறக்கட்டளை உள்பட நிலுவையில் இருந்த பிற அறக்கட்டளைகளின் பதிவுக் காலத்தை டிசம்பா் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.

அதே நேரம், அன்னை தெரஸா அறக்கட்டளையின் பதிவு புதுப்பித்தல் விண்ணப்பத்தைப் பரிசீலித்தபோது, அதில் சில பாதகமான தகவல்கள் இடம்பெற்றிருந்தது கண்டறியப்பட்டது. எனவே, உரிய நிபந்தனைகளைப் பூா்த்தி செய்யாததன் அடிப்படையில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

அந்த அறக்கட்டளையின் பதிவு செல்லத்தக்க காலம் வரும் 31-ஆம் தேதி வரை உள்ளது என்பதால், அதன் வங்கிக் கணக்குகளை மத்திய உள்துறை அமைச்சகம் முடக்கவில்லை. மாறாக, அந்த அறக்கட்டளை கோரிக்கை விடுத்ததன் அடிப்படையிலேயே அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டிருப்பதாக பாரத ஸ்டேட் வங்கி சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது" என விளக்கம் அளித்தது.

இந்தியாவில் இயங்கும் அரசு சாரா அமைப்புகள், வெளிநாட்டிலிருந்து நன்கொடைகளை பெறுவதற்கு வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்று சட்டத்தின்படி உரிமம் பெற வேண்டும். இம்மாதிரியாக பெறப்பட்ட 6,000க்கும் மேற்பட்ட அரசு சாரா அமைப்புகளின் உரிமம் டிசம்பர் 31ஆம் தேதி இரவுடன் காலாவதியாகிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

உரிமம் திரும்ப வழங்கப்பட்டிருப்பது குறித்து மத்திய அரசு எந்த அதிகாரப்பூர்வமான தகவல்களையும் வெளியிடவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.