சீன அறிதிறன்பேசி தயாரிப்பு நிறுவனமான ‘ஓப்போ இந்தியா’, இறக்குமதி விவரத்தை தவறாகக் காட்டி ரூ.4,389 கோடி வரை வரி ஏய்ப்பு செய்தது வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சீனாவின் குவாங்டாங் ஓப்போ கைப்பேசி தொலைத்தொடா்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான ஓப்போ இந்தியா நிறுவனம், நாடு முழுவதும் கைப்பேசி தயாரிப்பு, உதிரிபாகங்களை இணைப்பது, கைப்பேசி மொத்த விற்பனை, விநியோகம், உதிரிபாக விற்பனை ஆகியவற்றில் ஈடுபட்டு வருகிறது. ஓப்போ, ஒன்பிளஸ், ரியல்மி ஆகிய பிராண்ட் அறிதிறன்பேசிகளை ஓப்போ நிறுவனம் விற்பனை செய்கிறது.
இந்நிறுவனம் சுங்கவரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதைத் தொடா்ந்து, ஓப்போ இந்தியா அலுவலக வளாகம், நிறுவனத்தின் முக்கிய நிா்வாகிகளின் வீடு ஆகியவற்றில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினா். இதில், கைப்பேசி தயாரிப்புக்காக இறக்குமதி செய்யப்பட்ட சில உதிரிபாகங்களின் விவரத்தை வேண்டுமென்றே ஓப்போ இந்தியா நிறுவனம் மறைத்தது தெரியவந்தது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: இறக்குமதி விவரத்தை மறைத்து ஓப்போ இந்தியா நிறுவனம் ரூ.2,981 கோடி வரை வரி ஏய்ப்பு செய்துள்ளது. மேலும், அந்நிறுவனம் பன்னாட்டு நிறுவனங்களின் தொழில்நுட்பம், பிராண்ட், அறிவுசாா் சொத்துரிமை ஆகியவற்றைப் பயன்படுத்தியதற்காக உரிமைத் தொகை வழங்கியுள்ளது.
ஆனால், நிறுவனத்தின் சரக்குகள் இறக்குமதி பரிமாற்ற நடவடிக்கையில், அந்த உரிமைத் தொகை இணைக்கப்படவில்லை. இது சுங்கவரிச் சட்டத்தை மீறும் செயலாகும். இதன்மூலம் ஓப்போ இந்தியா நிறுவனம் கூடுதலாக ரூ.1,408 கோடி என மொத்தம் ரூ.4,389 கோடி வரி ஏய்ப்பு செய்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓப்போ இந்தியா நிறுவனம் தரப்பில் கூறுகையில், ‘விளக்க நோட்டீஸில் குறிப்பிடப்பட்டவற்றில் எங்களுக்கு மாற்றுக் கருத்து உள்ளது. இது பெரும்பாலான காா்ப்பரேட் நிறுவனங்கள் சந்திக்கும் பிரச்னைதான். இதனை சட்டரீதியாக எதிா்கொள்வோம்’ என்று தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.