குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு ஆதரவைக் கோருவதற்காக மும்பையில் ஆளும் கூட்டணிக் கட்சியின் எம்பி.க்கள், எம்எல்ஏ.க்களை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு இன்று சந்திக்கிறார்.
இந்த சந்திப்பு புறநகர் உணவகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் மதிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை விமான நிலையத்தில் முர்மு வந்தடைந்தவுடன், மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் அவரை வரவேற்கின்றனர்.
இதையும் படிக்கலாம்: பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் விரைவில் தொடக்கம்
சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் முர்முவுக்கு தனது கட்சி ஆதரவளிப்பதாக செவ்வாய்க்கிழமை அறிவித்தார். ஆனால், அவர் தாக்கரேவை சந்திப்பாரா என்பது தெரியவில்லை.
குடியரசுத் தலைவர் தேர்தலில் முர்முவுக்கு எதிராக யஷ்வந்த் சின்ஹாவை எதிர்க்கட்சிகள் நிறுத்தியுள்ளன.
முர்மு இதற்கு முன்பு ஜார்கண்ட் மாநில ஆளுநராக பணியாற்றியவர்.அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அரசியலமைப்புச் சட்டத்தின் உயர் பதவியை வகிக்கும் முதல் பழங்குடியினப் பெண் ஆவார்.