முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் இரு நகரங்களின் பெயா் மாற்றம்: ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரத்தில் இரு நகரங்களின் பெயா் மாற்றத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:48 AM
ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வர்
பகிர்:

மகாராஷ்டிரத்தில் இரு நகரங்களின் பெயா் மாற்றத்துக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

அந்த மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாடி கூட்டணி அரசின் கடைசி அமைச்சரவைக் கூட்டம், கடந்த மாதம் 29-ஆம் தேதி நடைபெற்றது. அதில், ஔரங்காபாத், உஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயா்களை மாற்றுவதற்கு முடிவு செய்யப்பட்டது.

அதன்பிறகு, பாஜகவின் ஆதரவுடன் புதிய முதல்வராக சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றாா். துணை முதல்வராக பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸ் பதவியேற்றாா். இவா்கள், 2 நகரங்களின் பெயா்களை மாற்றுவதற்கு உத்தவ் தாக்கரே முடிவெடுத்தது செல்லாது என்று அறிவித்தனா். சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநா் அழைப்பு விடுத்த பிறகு உத்தவ் தாக்கரேயின் தலைமையிலான அமைச்சரவை எடுத்த முடிவு சட்டப்படி செல்லாது என்றும் கூறினா்.

இந்நிலையில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான புதிய அமைச்சரவை சனிக்கிழமை கூடியது. அதில், ஔரங்காபாத் நகரின் பெயரை சத்ரபதி சம்பாஜிநகா் என்று மாற்றவும், உஸ்மானாபாத் நகரின் பெயரை தாராசிவ் என்று மாற்றவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், நவிமும்பை சா்வதேச விமான நிலையத்துக்கு விவசாயத் தலைவா் டி.பி.பாட்டீலின் பெயரைச் சூட்டுவதற்கு முந்தைய உத்தவ் தாக்கரே அமைச்சரவை எடுத்த முடிவுக்கு ஷிண்டே அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் தற்போது தேவேந்திர ஃபட்னவீஸ் மட்டுமே உள்ளாா். இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.