பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிரான திட்டங்களை மேற்கொள்வதன் விளைவாக நாட்டில் கடுமையான உணவு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் சார்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியான காங்கிரஸ் நாட்டில் உணவுப் பொருள்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது. நாட்டில் உணவுப் பொருள்களின் இருப்பு கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைவாக உள்ளது. அனைத்திந்திய காங்கிரஸ் தலைமையகத்தில் இன்று (ஜூலை 16) நடைபெற்ற கருத்தரங்கில் கிசான் காங்கிரஸின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சுக்பால் கைரா இதனை தெரிவித்தார். மேலும், மத்திய அரசு சட்ட ரீதியாக குறைந்தபட்ச ஆதார விலை கொடுப்பதை உறுதி செய்ய உடனடியாக குழுவினை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கிசான் காங்கிரஸின் புதிய தலைவர் சுக்பால் கைரா கூறியதாவது: “மத்திய அரசு, உத்தரப் பிரதேசம் மற்றும் குஜராத் உட்பட 10 மாநிலங்களுக்கான கோதுமை வழங்கலை குறைத்துள்ளது. கோதுமையின் உற்பத்தி குறைந்ததால் இந்த முடிவினை மத்திய அரசு எடுத்துள்ளது. நெல் பயிரிடப்படும் நில அளவினை பல ஆண்டுகளாக குறைக்க வலியுறுத்தி வரும் நிலையில் மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஸ் கோயல் வேண்டுமென்றே நெல் பயிரிடப்படும் இடங்களை அதிகப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். விவசாயிகள் உரங்களுக்கான தட்டுப்பாட்டை சந்தித்து வருகின்றனர். உரங்களின் விலையும் அதிகரித்துள்ளது. மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து விவசாயிகளை ஏமாற்றி அவர்களது பணக்கார நண்பர்களுக்கு உதவி செய்து வருகிறது. எங்களது நியாயமான கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால் 500 மாவட்டங்களில் அரசினை கண்டித்து போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.