ஐதராபாத் விமானத்தில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த பயணி ஒருவருக்கு தக்க சமயத்தில் சிகிச்சையளித்துள்ளார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
தெலங்கானா மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் வாராணசி சென்றிருந்தார். நேற்றிரவு புது தில்லி-ஹைதராபாத் விமானத்தில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
அப்போது, இண்டிகோ விமானம் நடுவானில் சென்றுகொண்டிருந்தபோது சகபயணி ஒருவருக்கு திடீர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விமானப் பணிப் பெண்ணிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. விமானத்தில் யாராவது மருத்துவர் இருக்கிறார்களா? எனக் கேட்டார்.
சற்றும் தாமதிக்காமல் உடனே, ஆளுநர் உடல்நிலை பாதிக்கப்பட்டவரிடம் அருகில் சென்று அவரை படுக்கவைத்து, முதலுதவி சிகிச்சையளித்து, சில மருந்துகளையும் கொடுத்தார்.
இதையும் வாசிக்கலாம்| ராம்நாத் கோவிந்துக்கு பிரியாவிடை கொடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
அவருக்கு அஜீரண கோளாறு ஏற்பட்டதால், அதிகமாக வியர்த்துச் சிரமப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். சிறிது நேரத்தில் பயணி கண்விழித்தார்.
பின்னர், ஹைதராபாத் விமான நிலையத்திற்கு சக்கர நாற்காலியில் அமர்ந்து, அந்த பயணி விமான நிலைய மருத்துவ அறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
இண்டிகோ விமானப் பணிப்பெண் மற்றும் ஊழியர்கள் சரியான நேரத்தில் விழிப்பூட்டியதற்காக சௌந்தரராஜன் அவர்களைப் பாராட்டினார். அதோடு விமான நிறுவனத்திற்கு சில ஆலோசனைகளையும் அவர் கூறினார்.
ஆளுநராக இருந்தாலும் தக்க சமயத்தில் வந்த பயணிக்கு உதவிய தமிழிசை சௌந்தரராஜனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.