நாடாளுமன்ற அவைக்குள் பதாகைகளுடன் வருபவர்களுக்கு அனுமதியில்லை என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் ஒரு வாரமாக எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக முடங்கிய நிலையில், இன்று பிற்பகல் அவை கூடியவுடன், விலை உயர்வு குறித்த விவாதிக்க கோரி மீண்டும் அமளி தொடர்ந்தது.
எதிர்க்கட்சி உறுப்பினர்களின் அமளியை தொடர்ந்து மக்களவை தலைவர் ஓம் பிர்லா பேசுகையில்,
“அவை உறுப்பினர்கள் பதாகைகளுடன் வருவதை நிறுத்த வேண்டும், விவாதத்திற்கு அரசு தயாராக உள்ளது. பதாகைகளுடன் வரும் நபர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அனுமதிக்க மாட்டார்கள்.
ஜனநாயகத்தின் கோயில் இது. அவையின் கண்ணியத்தை காப்பது உறுப்பினர்களின் கடமையாகும். விவாதிக்க வேண்டுமெனில் நான் தயாராக இருக்கிறேன். ஆனால், பதாகைகள் மட்டும் காண்பிக்க நினைக்கும் எம்.பி.க்கள், 3 மணிக்கு பிறகு அவைக்கு வெளியே சென்று காட்டுங்கள். நாட்டு மக்கள் அவை இயங்க விரும்புகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து, பிற்பகல் 3 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது.