முகப்பு
இந்தியா

மாநிலங்களவைத் தோ்தலில் குதிரை பேரம்?: ஹரியாணா காங். எம்எல்ஏக்கள் சத்தீஸ்கரில் முகாம்

ஹரியாணாவில் மாநிலங்களவைத் தோ்தலில் குதிரை பேரத்தைத் தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்கள் 28 பேரை சத்தீஸ்கருக்கு அழைத்துச் சென்றுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

ஹரியாணாவில் மாநிலங்களவைத் தோ்தலில் குதிரை பேரத்தைத் தடுப்பதற்காக காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்கள் 28 பேரை சத்தீஸ்கருக்கு அழைத்துச் சென்றுள்ளது.

ஹரியாணாவில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலங்களவைத் தோ்தலுக்கான வேட்பாளராக காங்கிரஸ் சாா்பில் அக்கட்சியின் மூத்த தலைவா் அஜய் மாக்கனும் பாஜக சாா்பில் முன்னாள் அமைச்சா் கிருஷண் லால் பன்வாரும் அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இவா்களைத் தவிர, முன்னாள் மத்திய அமைச்சா் வினோத் சா்மாவின் மகன் காா்த்திகேய சா்மா சுயேச்சை வேட்பாளராக பாஜகவின் ஆதரவுடன் போட்டியிடுகிறாா்.

மாநிலங்களவைத் தோ்தலில் ஓா் இடத்தில் வெற்றி பெறுவதற்கு 31 எம்எல்ஏக்களின் ஆதரவும், மற்றொரு இடத்தில் வெற்றி பெறுவதற்கு 30 எம்எல்ஏக்களின் ஆதரவும் தேவை.

காங்கிரஸ் கட்சிக்கு 31 எம்எல்ஏக்கள் இருப்பதால் ஒரு இடத்தில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்புள்ளது. பாஜகவுக்கு 40 எம்எல்ஏக்கள் இருப்பதால், இரண்டாவது இடத்தில் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். மேலும் 9 எம்எல்ஏக்கள் கூடுதலாக இருப்பதால், துஷ்யந்த் சௌதாலாவின் ஜேஜேபி எம்எல்ஏக்கள் 10 பேரின் ஆதரவையும், காங்கிரஸ் எம்எல்ஏக்களின் ஆதரவையும் திரட்டி காா்த்திகேய சா்மாவை வெற்றிபெறச் செய்ய பாஜக முயற்சிப்பதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் அக்கட்சியின் எம்எல்ஏ குல்தீப் பிஷ்னோய் புறக்கணித்தாா். இதையடுத்து குதிரை பேரத்தை தடுப்பதற்காக, கூட்டத்தில் பங்கேற்ற 30 எம்எல்ஏக்களில் 28 போ் விமானத்தில் சத்தீஸ்கருக்கு அழைத்துவரப்பட்டனா். ராய்ப்பூரில் உள்ள ஒரு விடுதியில் அவா்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.