பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் சர்ச்சைக் கருத்தினைக் கூறி பாஜகவிலிருந்து நீக்கப்பட்டிருக்கும் செய்தித் தொடர்பாளர் நூபுர் சர்மாவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.
கடந்த ஞாயிற்றுக் கிழமை பாஜக செய்தித் தொடர்பாளர்களான நூபுர் சர்மா மற்றும் நவீன்குமார் ஜிண்டால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். முகமது நபி குறித்து தொலைக்காட்சி விவாத மேடையில் சர்ச்சைக்குரிய கருத்தினை தெரிவித்ததால் கட்சியிலிருந்து இருவரும் நீக்கப்பட்டனர்.
முகமது நபி குறித்த இவர்களின் கருத்திற்கு பல்வேறு நாடுகளும் தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.இந்தியாவின் தரப்பில் இந்தியா எந்த ஒரு மதத்திற்கும் எதிரான நாடு இல்லை என விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கிடையில் நூபுர் சர்மாவிற்கு கொலை மிரட்டல்களும் வந்துள்ளன. இந்நிலையில், பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் இன்ஸ்டாகிரம் மூலம் நூபுர் சர்மாவிற்கு தனது ஆதரவினை தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிரம் பதிவில் கங்கனா ரணாவத் கூறியிருப்பதாவது,” நூபுர் சர்மா கூறிய கருத்தில் தவறு இருந்தால் அதனை ஒருவர் சட்டத்தின் மூலம் தான் அணுக வேண்டும். அதைவிடுத்து, கொலை மிரட்டல் விடுப்பதற்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நூபுர் சர்மாவிற்கு அவரது கருத்தினை கூறுவதற்கு உரிமை உள்ளது. அனைத்து விதமான அச்சுறுத்தல்களும் அவரை மையப்படுத்தியே வருவதை நான் பார்க்கிறேன். இந்து கடவுள் தினமும் அவமதிக்கப்படுகிறது. அவமதிக்கும் செயலில் ஈடுபவர்களை எதிர்த்து நாங்கள் சட்டப்படிதான் செயல்படுவோம். அதனை நூபுர் சர்மா கூறிய கருத்திற்கும் அவர்கள் பின்பற்றலாம். இது ஆப்கானிஸ்தான் அல்ல. இங்கு மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் ஆட்சி செய்கின்றனர்.” எனப் பதிவிட்டுள்ளார்.