மகாராஷ்டிரத்தின் நாக்பூர் மாவட்டத்தில் ஏடிஎம்மில் பணம் எடுத்த நபருக்கு 5 மடங்காகப் பணம் வந்ததையடுத்து அவருக்கு இன்ப அதிர்ச்சி ஏற்பட்டது.
நாக்பூர் நகரத்திலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கபர்கெடா நகரில் உள்ள ஒரு தனியார் வங்கியின் தானியங்கி பணம் பெறும் இயந்திரத்தில்(ஏடிஎம்) ரூ.500 பணம் எடுக்க முயன்ற நபருக்கு ரூ.2,500 வந்துள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம், காட்டுத் தீ போல் அனைவருக்கும் பரவியது. சிறிது நேரத்திலேயே பணம் எடுக்க ஏடிஎம் மையத்திற்கு வெளியே ஏராளமானோர் திரண்டனர்.
பின்னர், வங்கி வாடிக்கையாளர் ஒருவர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஏடிஎம் மையத்தை மூடிவிட்டு வங்கிக்கு தகவல் கொடுத்தார்.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏடிஎம் மையத்தில் கூடுதல் பணம் வந்துள்ளது. 100 ரூபாய் நோட்டுகள் வைப்பதற்குப் பதிலாக ஏடிஎம் ட்ரேயில் ரூ.500 நோட்டுகள் தவறாக வைக்கப்பட்டிருந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இது தொடர்பாக இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார்.