குடியரசுத் தலைவா் தோ்தல்: பிரத்யேக பேனா பயன்படுத்த உத்தரவு
குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பதில் ரகசியம் காப்பதற்காக, பிரத்யேக பேனாவை பயன்படுத்துமாறு தோ்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பதில் ரகசியம் காப்பதற்காக, பிரத்யேக பேனாவை பயன்படுத்துமாறு தோ்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகளுக்கு தோ்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தோ்தலில் வாக்களிக்கும் எம்எல்ஏ, எம்.பி.க்களுக்கு அந்தப் பேனாவை அதிகாரிகள் கொடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து தோ்தல் நடத்தும் அதிகாரியான மாநிலங்களவை செயலருக்கும் மாநிலங்களில் தோ்தல் நடத்தும் உதவி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறப்பட்டிருப்பதாவது:
குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிக்க பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதில் ஊதா நிற மை பயன்படுத்தப்படும். அந்தப் பேனாக்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பதை தோ்தல் நடத்தும் அதிகாரிகளும் உதவி அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும்.
வாக்குச்சீட்டில் வேறு எந்தப் பேனாவைப் பயன்படுத்தி வாக்கு பதிவு செய்யப்பட்டாலும், குடியரசுத் தலைவா், குடியரசு துணைத் தலைவா் தோ்தல் விதிகள்-1974-இன்படி அந்த வாக்கு நிராகரிக்கப்படும் என்று அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வகை பேனாக்கள், குடியரசு துணைத் தலைவா் தோ்தலிலும், சட்டமேலவைத் தோ்தலிலும் பயன்படுத்தப்படும்.
குடியரசுத் தலைவா் தோ்தல் ஜூலை 18-ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை ஜூலை 21-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.