முகப்பு
இந்தியா

சீர்திருத்தங்கள் நீண்ட கால அளவில் பயன் அளிக்கும்: பிரதமர் மோடி

நீண்ட காலத்தில் சீர்திருத்தங்கள் பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:35 AM
பகிர்:

நீண்ட காலத்தில் சீர்திருத்தங்கள் பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

பெங்களூரில் திங்கள்கிழமை பல்வேறு வளர்ச்சிப் பணிகளை தொடக்கி வைத்து அவர் பேசியது: 21-ஆம் நூற்றாண்டு இந்தியா சொத்து, வேலை உருவாக்குபவர்கள், புத்தாக்கர்களுக்கு சொந்தமானதாகும். நமது நாட்டின் உண்மையான பலமாக அவர்கள் உள்ளனர். கடந்த 8 ஆண்டுகளாக சொத்து மற்றும் வேலை உருவாக்குபவர்கள், புத்தாக்கர்களுக்கு ஊக்கமளித்து வருகிறோம். ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்கம் என்பது எளிதான காரியமல்ல. அதேபோல, கடந்த 8 ஆண்டுகளாக நமதுநாட்டை ஸ்டார்ட் அப் மற்றும் புத்தாக்கப்பாதையில் கொண்டு செல்வதும் சாதாரணமான பணியாக இருக்கவில்லை. 

அரசு எடுக்கும் பல்வேறு முடிவுகள், சீர்திருத்தங்கள் குறுகிய காலத்தில் அசெüகரியமாக தென்பட்டாலும், நீண்டகாலத்தில் அவை பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும். சீர்திருத்தப் பாதையில் பயணித்தால் மட்டுமே நம்மால் புதிய இலக்குகளையும், புதிய தீர்வுகளையும் அடைய முடியும். 

நெடுங்காலமாக அரசு கட்டுப்பாட்டில் இருந்து வந்த விண்வெளி மற்றும் ராணுவ உற்பத்தித் துறைகளை தனியாருக்கு திறந்துவிட்டிருக்கிறோம். எல்லா வசதி வாய்ப்புகளையும் செய்து கொடுத்து, குடிமக்களின் வாழ்க்கையில் அதிக தலையீடு இல்லாமல் அரசு செயல்பட்டால் எதை சாதிக்க முடியும் என்பதை பெங்களூரு வெளிப்படுத்தியுள்ளது. இந்திய இளைஞர்களின் கனவு நகரம் பெங்களுரு. இதற்கு, தொழில் முனைப்பாற்றல், புத்தாக்கம் மற்றும் சரியான முறையில் செயல்படுத்தப்படும் அரசு மற்றும் தனியார் கூட்டு செயல்திட்டங்கள்தான் காரணமாகும்.

இந்தியாவின் தனியார் துறையை, தனியார் நிறுவனங்களை இன்றைக்கும் குறை கூறுவோரின் மனநிலையை மாற்றிக் கொள்ள பெங்களூரு பாடம் கற்றுத்தருகிறது. இப்படிப்பட்ட மனநிலை கொண்டவர்கள் நமது நாட்டின் பலத்தையும், கோடிக்கணக்கான மக்களின் திறன்களையும் குறைத்துவிடுகிறார்கள். இரட்டை என்ஜின் (மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சியின் ஆட்சி) அரசு அளித்த வாக்குறுதிகள், செயல்பாட்டுக்கு வந்துள்ளதை இன்றைக்கு காண முடிகிறது. 

இன்றைக்கு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் வாழ்க்கை நடத்துவதை எளிதாக்கவும், வணிக நடைமுறைகளை எளிதாக்கவும் உதவியாக இருக்கும். ஒரே இந்தியா - வலுவான இந்தியா என்ற முழக்கத்தின் பிரதிபலிப்புதான் பெங்களூரு. பெங்களூரு மாநகரின் வளர்ச்சி, லட்சக்கணக்கான மக்களின் கனவுகளின் முன்னேற்றத்தோடு தொடர்பு கொண்டதாகும். வாழ்வாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் பெங்களூரு மாநகர ஒட்டுமொத்த வளர்ச்சியை அடையும் என்ற உறுதிமொழியை இரட்டை என்ஜின் அரசு வழங்குகிறது.

பெங்களூருக்காக புறநகர் ரயில் திட்டத்தை செயல்படுத்துவதில் 40 ஆண்டுகால தாமதம் ஏற்பட்டுள்ளது. 

இத்திட்டம் சரியான காலத்தில் செயல்படுத்தப்பட்டிருந்தால், பெங்களூரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் அழுத்தம் ஏற்பட்டிருக்காது. மேலும் பெங்களூரு கூடுதலாக வளர்ச்சி பெற்றிருக்கும். நேரத்தை வீணாக்க நான் விரும்பவில்லை. ஒவ்வொரு வினாடியும் வேலை செய்வோம் என்றார்.

எந்த நாடாக இருந்தாலும் சுகாதாரத்துக்கு முக்கியத்துவம்: பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் மைய (ஐஐஎஸ்சி) வளாகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ரூ.280 கோடி மதிப்பிலான மூளை ஆராய்ச்சி மையத்தை திறந்துவைத்து, மைன்ட்ரீ நிறுவனத்தின் 832 படுக்கைகள் கொண்ட பாக்சி-பார்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி வைத்து, பிரதமர் பேசியது: 

மூளை ஆராய்ச்சி மையத்தை அமைக்க அடிக்கல் நாட்டிய எனக்கு, அதை திறந்து வைக்கவும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சிஅளிக்கிறது. மூளை சார்ந்த குறைபாடுகளை நிர்வகிப்பது குறித்த ஆராய்ச்சிகளை முன்னெடுப்பதில் இந்த மையம் முன்னணியில் விளங்கும். எந்த நாடாக இருந்தாலும் சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். 

அந்த வகையில் பாக்சி-பார்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனை முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்காலத்தில் இந்த மருத்துவமனை சுகாதார திறன்களை பலப்படுத்துவதோடு, இத்துறைசார்ந்த ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதிலும் முன்னோடியாகத் திகழும் என்றார்.

இந்த விழாவில் கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், முதல்வர் பசவராஜ் பொம்மை, மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ்.கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய அறிவியல் மையத்தின் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் முயற்சியால் மூளை ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் எஸ்.கோபாலகிருஷ்ணன், அவரது மனைவி சுதா ஆகியொர் ரூ.280 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர்.

பாக்சி-பார்த்தசாரதி பன்னோக்கு மருத்துவமனையை மைன்ட்ரீ தகவல் தொழில்நுட்ப நிறுவனம் அமைக்கவுள்ளது. இது ஆராய்ச்சிப் பணிகளுக்காக பயன்படுத்தப்படவிருக்கிறது. இந்தத் திட்டத்திற்கு மைன்ட்ரீ நிறுவனத்தின் இணை நிறுவனர்களான சுப்ரதா பாக்சி மற்றும் என்.எஸ்.பார்த்தசாரதி இருவரும் ரூ.425 கோடியை நன்கொடையாக அளித்துள்ளனர். இந்த மருத்துவமனை 2024-ஆம் ஆண்டு முதல் செயல்படத் தொடங்கும் என்று இந்திய அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →