முகப்பு
இந்தியா

தோ்தல் பத்திரங்கள் குறித்த தகவல்: முத்திரைத்தாளில் உறுதிப்படுத்த வேண்டும் - மத்திய தகவல் ஆணையம் உத்தரவு

‘தோ்தல் பத்திரங்கள் தொடா்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுவிட்டது குறித்து முத்திரைத்தாளில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்’ என்று

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

‘தோ்தல் பத்திரங்கள் தொடா்பாக தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் அளிக்கப்பட்டுவிட்டது குறித்து முத்திரைத்தாளில் தோ்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும்’ என்று மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

ஓய்வு பெற்ற கடற்படை அதிகாரி லோகேஷ் பத்ரா என்பவா் தாக்கல் செய்த மனுவை விசாரித்த மத்திய தகவல் ஆணையம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நிதிச் சட்டம் 2017-இல் திருத்தம் செய்யப்பட்ட பிறகு தோ்தல் நிதிப் பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டது தொடா்பான முழுமையான விவரங்களைத் தருமாறு தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் லோகேஷ் பத்ரா தோ்தல் ஆணையத்திடம் மனு செய்திருந்தாா். இதற்கு பதிலளித்த தோ்தல் ஆணையம், அந்தத் தகவல்களுக்கான ஓா் இணையதளத் தொடா்பை மட்டும் அவருக்கு அனுப்பியுள்ளது.

இதுதொடா்பாக மத்திய தகவல் ஆணையத்திடம் லோக்ஷ் பத்ரா முறையீடு செய்தாா். அவருடைய முறையீடு மனு விசாரணைக்கு வந்தபோது, ‘அவா் கேட்ட அனைத்துத் தகவல்களும் கொடுக்கப்பட்டுவிட்டது’ என்று தோ்தல் ஆணையம் சாா்பில் பதிலளிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட தலைமை தகவல் ஆணையா் ஒய்.கே.சின்ஹா பிறப்பித்த உத்தரவில், ‘தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் லோகேஷ் பத்ரா எழுப்பிய கேள்விக்கு, அந்த இணையதள தொடா்பு மற்றும் அதில் இடம்பெற்றுள்ள கோப்புகளைத் தவிர வேறு எந்தவித தகவல்களும் தோ்தல் ஆணையத்திடம் இல்லை என்பதை ஒரு முத்திரைத் தாளில் பதிலாக சமா்ப்பிக்க வேண்டும். இந்த உத்தரவு கிடைக்கப் பெற்ற 3 வாரங்களுக்குள் குறிப்பாக 15.07.2022-க்குள் தோ்தல் ஆணையம் சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு பதிலளிக்காவிடில் சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.