ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 105 வயது மூதாட்டி ஒருவர் ஓட்டப்பந்தயதில் பங்கேற்றதோடு மட்டுமல்லாமல், புதிய சாதனையையும் நிகழ்த்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
ஞாயிறன்று தேசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற மூதாட்டி ராம்பாய், 100 மீட்டர் ஓட்டப் பந்தய தொலைவை 45.40 வினாடிகளில் கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
100 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான இந்த ஓட்டப்பந்தயத்தில், ராம்பாய் மட்டுமே பங்கேற்று ஓடியிருந்தார். இதில் அவர் புதிய சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இவ்வளவு வயதில், அவர் ஓட்டப்பந்தயத்தில் ஓடி புதிய சாதனை படைப்பதற்குக் காரணம் அவர் எடுத்துக் கொள்ளும் உணவுதான் காரணம் என்கிறார். தினமும் தான் கோதுமை, பால், தயிர் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்வதாகக் கூறியுள்ளார்.
சுத்த சைவமான ராம்பாய், நாள்தோறும் 250 கிராம் நெய் மற்றும் 500 கிராம் தயிரை உணவில் சேர்த்துக் கொள்வார் என்றும் கூறுகிறார். அதுமட்டுமல்ல, நாள்தோறும் இரண்டு வேளை 500 மில்லி லிட்டர் பால் குடிப்பாராம். கோதுமை ரொட்டிகளை விரும்பி சாப்பிடும் ராம்பாய், அரிசி உணவை அவ்வளவாக எடுத்துக் கொள்வதில்லையாம்.
நாள்தோறும் வயலில் வேலை செய்து உடற்கட்டை பேணுவதோடு, 3 முதல் 4 நாள்கள் தினமும் ஓட்டப் பயிற்சி மேற்கொள்வதாகவும் உற்சாகம் குறையாமல் கூறுகிறார்.