வாய்பேச முடியாத சிறுவன், ஆதார் உதவியால் 6 ஆண்டுகளுக்குப் பின் தாயுடன் இணைப்பு
வாய் பேச முடியாத சிறுவன், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின் ஆதார் அட்டை விவரங்களின் உதவியால் தாயுடன் இணைக்கப்பட்டார்.
பெங்களூரு: கர்நாடக மற்றும் மகாராஷ்டிர அதிகாரிகள் ஒன்றிணைந்து மேற்கொண்ட நடவடிக்கையால், வாய் பேச முடியாத சிறுவன், சுமார் 6 ஆண்டுகளுக்குப் பின் ஆதார் அட்டை விவரங்களின் உதவியால் தாயுடன் இணைக்கப்பட்டார்.
பி. பரத்குமார் என்ற அந்தச் சிறுவன் 2016ஆம் ஆண்டு தனது தாய் பர்வதம்மாள் சந்தைக்கு காய்கறிகள் விற்க வந்தபோது காணாமல் போயிருக்கிறார்.
தனது மகன் காணாமல் போனது குறித்து ஏலஹன்கா காவல்நிலையத்தில் பர்வதம்மாள் புகார் அளித்துள்ளார். ஆனால், குழந்தை காணாமல் போனதற்கோ கடத்தப்பட்டதற்கோ எந்த சாட்சியும் கிடைக்கவில்லை.
Advertisement
ஆனால், பரத், காணாமல் போன நாளிலிருந்து சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரை வந்தடைந்துள்ளார். நாக்பூர் ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த சிறுவனை அங்கிருந்த ரயில்வே காவலர்கள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பரத் பெயரில் ஆதார் அட்டை எடுக்க முயன்றபோது, அவன் பெயரில் ஏற்கனவே ஆதார் அட்டை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக மும்பை மண்டல ஆதார் அதிகாரிகளை தொடர்பு கொண்டு காப்பக அதிகாரிகள் உதவி கேட்டனர். அப்போது, பரத்தின் கைவிரல் ரேகைகள் பெங்களூருவில் உள்ள சிறுவனின் ஆதார் அட்டையுடன் ஒத்துப்போவதாகக் கூறினர்.
உடனடியாக, அந்தச் சிறுவனின் விவரங்களைப் பெற்று, கர்நாடக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சிறுவனின் தாயை தொடர்பு கொண்டு, சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகனை தாயுடன் சேர்த்துள்ளனர்.