தில்லியில் 2 மாதக் குழந்தையை கொன்று மைக்ரோவேவ் ஓவனில் உடலை வைத்திருந்ததாக, தாயாரைக் கைது செய்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு நாள்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் குறித்து தாயார் முரணான பதில்களையே தருவதாலும், இதில் வேறு எந்த குற்றவாளிகளும் கண்டறியப்படாததாலும், தாயார் மீது சந்தேகம் வலுத்துள்ளதாக தில்லி காவல் துறை தெரிவித்துள்ளது.
தெற்கு தில்லியின் சிராஜ் பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் டிம்பிள். 26 வயதான அவருக்கு 6 ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. அவருக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், பிறந்து இரண்டு மாதமே ஆன குழந்தை இறந்த நிலையில், வீட்டில் இருந்த மைக்ரோவேவ் ஓவனில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பேசிய காவல் துறை துணை ஆணையர் பெனிடா மேரி ஜெய்கர், திங்கள் கிழமை இரவும், செவ்வாய்க் கிழமை காலையும் குழந்தையின் தாயிடம் விசாரணை நடத்தினோம். குழந்தை இறந்தது தொடர்பாக முரணான தகவலையே தருவதால், தாயார் மீது சந்தேகம் வலுத்துள்ளது.
திங்கள் கிழமை இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஆனால் குழந்தை ஒரு நாளுக்கு முன்பே இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், இறந்த குழந்தையின் உடலில் அடித்ததற்கான தழும்புகள் இருந்ததாகவும் மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பாக குழந்தையின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் அடுக்குமாடி குடியிருப்பின் அண்டை வீட்டாரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் அளித்துள்ள தகவலும் தாயாரின் மீதே சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இந்த சம்பவத்தில் வெளிநபர்கள் ஈடுபட்டுள்ளதற்கான வாய்ப்புகள் குறைவாக உள்ளது. மேலும் மற்றவர்களிடமிருந்து மறைப்பதற்காகவே மைக்ரோவேன் ஓவனில் உடல் மறைத்துவைக்கப்பட்டுள்ளது. குடும்ப உறுப்பினர்கள் குழந்தையை தேடும்போது அறையினுள் தாயார் சுயநினைவின்றி இருந்துள்ளார். தாயை சந்தேகப்படாமல் இருக்க வாய்ப்புகள் குறைவு. இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.