லலித்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் லலித்பூர் அருகே, 13 வயது சிறுமி, நான்கு பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், காவல்நிலையத்துக்கு வந்த சிறுமியை காவல்நிலைய காவலரும் பலாத்காரம் செய்த கொடூரம் நடந்திருக்கிறது.
இது தொடர்பாக சிறுமியின் உறவினப் பெண் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், காவல்நிலைய காவலர் தலைமறைவாக உள்ளார். மற்ற 5 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மற்ற காவலர்கள் அனைவரும், இந்த காவல்நிலையத்திலிருந்து வேறு பணிகளுக்கு மாற்றப்பட்டிருப்பதாக காவல்துறை டிஐஜி தெரிவித்துள்ளார். இது குறித்து காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை கையிலெடுத்திருக்கும் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சியினர், இனிமேல் பெண்கள் தங்களுக்கு எதிராக அநீதிகள் இழைக்கப்படும்போது அவர்கள் புகார் கொடுக்க எங்கேச் செல்வார்கள், யாரைத்தான் நம்புவார்கள் என்று கேட்டுள்ளனர்.
இது குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் கூறுகையில், லலித்பூரிலிருந்து தனது பெண்ணை போபாலுக்குக் கடத்திச் சென்ற நான்கு பேர் அங்கு மூன்று நாள்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு பெண்ணை பாலி காவல்நிலையம் அருகே விட்டுச் சென்றுள்ளனர். அங்குச் சென்ற சிறுமியை, காவலர் மீண்டும் பலாத்காரம் செய்துள்ளார் என்கிறார் கண்ணீரோடு.