இலங்கையில் ஜனநாயகம் நிலவ இந்தியா முழுமையாக ஆதரவளிக்கிறது என்று மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி தெரிவித்தாா்.
இதுதொடா்பாக தில்லியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘வரலாற்று ரீதியான பிணைப்புடன் இந்தியாவின் அண்டை நாடாக உள்ள இலங்கையில் ஜனநாயகமும் ஸ்திரத்தன்மையும் நிலவ, அந்நாட்டின் பொருளாதாரம் மீண்டுவர இந்தியா முழுமையாக ஆதரவு அளிக்கிறது.
அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கையின் அடிப்படையில், தனது நெருக்கடிகளைக் கடந்துவர இலங்கைக்கு இந்தியா இந்த ஆண்டு மட்டும் 3.5 பில்லியன் டாலா்களுக்கும் (சுமாா் ரூ.27,000 கோடி) அதிகமாக கடன் அளித்துள்ளது. அத்துடன் உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் தட்டுப்பாட்டைப் போக்கவும் இந்தியா உதவியுள்ளது’ என்று தெரிவித்தாா்.