பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியமைந்து 8 ஆண்டுகள் நிறைவடைவதை பிரதமர் சிம்லாவில் கொண்டாட உள்ளதாக அம்மாநில பாஜக தலைவர் சுரேஷ் கஷ்யாப் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்தார்.
வருகிற மே 31 ஆம் தேதி பிரதமர் மோடி சிம்லாவில் தனது 8 ஆண்டுகால நல்லாட்சியை சிறப்பாக கொண்டாட உள்ளதாக சுரேஷ் கஷ்யாப் தெரிவித்தார். மாநில பாஜக அமைப்பு வருகிற மே 30 ஆம் தேதி தொடங்கி வருகிற ஜுன் 15 வரை இந்த 8 ஆண்டு கால சிறந்த நிர்வாகம் , சேவை மற்றும் ஏழை மக்களுக்கான பிரதமரின் உழைப்பினை கொண்டாட உள்ளதாக சுரேஷ் தெரிவித்தார்.
இந்த கொண்டாட்டத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி அவரது கேபினட் அமைச்சர்கள் சிலருடன் சிம்லாவிற்கு வருகை புரிய உள்ளார். பிரதமரின் வருகை பாஜக தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளிப்பதாக இருக்கும் என சுரேஷ் தெரிவித்தார்.
இது குறித்து ஹிமாசல பாஜக மாநிலத் தலைவர் சுரேஷ் கஷ்யாப் கூறியதாவது, ”நாங்கள் உலகத்திலேயே மிகப்பெரிய தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை இந்த கரோனா பேராபத்து காலத்தில் மேற்கொண்டுள்ளோம். 9 கோடி குடும்பங்களுக்கு இலவச ரேஷன் பொருட்களை வழங்கியுள்ளோம். அடல் டனலை (atal tunnel) கட்டி முடித்தோம். கடந்த 1993 ஆம் ஆண்டு முதல் கிடப்பில் போடப்பட்ட ரேனுகா அணை (renuka dam) கட்டுமானப் பணியினை நிறைவு செய்தோம். ஒரு சிறிய மாநிலத்தில் இத்தனை சாதனைகள் படைத்துள்ளோம். இந்த கொண்டாட்டத்தின் போது மத்திய அரசின் சாதனைகள் அடங்கிய துண்டு பிரசுரம் மக்களுக்கு வழங்கப்படும்” என்றார்.