முகப்பு
இந்தியா

பாதுகாப்பை உறுதி செய்த நீதிமன்றம்! அரசு பங்களாவை காலி செய்கிறார் சு.சுவாமி!!

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதையடுத்து அரசு பங்களாவை காலி செய்வதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:44 AM
பகிர்:

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமிக்கு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டதையடுத்து அரசு பங்களாவை காலி செய்வதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 

மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுப்பிரமணியன் சுவாமிக்கு உள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, தில்லியில் அவருக்கு அரசு பங்களா கடந்த 2016, ஜனவரி 15-ஆம் தேதி 5 ஆண்டு காலத்துக்கு ஒதுக்கப்பட்டது. அந்த காலம் முடிந்தும் சுப்பிரமணியன் சுவாமி அதில் தங்கியிருக்கும் வகையில், அதனை மறுஒதுக்கீடு செய்யக் கோரி, தில்லியில் உயா்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மேலும் அவருக்கு 'இஸட்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில் தில்லியில் உள்ள தமது சொந்த இல்லத்தில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த வழக்கில், ‘சுப்பிரமணியன் சுவாமிக்கான இசட் பிரிவு பாதுகாப்பு நீடித்து வருகிறது. ஆனால், அரசின் கொள்கைகள் மற்றும் வழிகாட்டுதல்கள்படி, இசட் பிரிவு பாதுகாப்பில் இருப்பவா்களுக்கு அரசு பங்களா ஒதுக்க வேண்டிய கட்டாயம் கிடையாது. அதே பங்களாவை மறுஒதுக்கீடு செய்வது சாத்தியமில்லை. அவா் மாறக் கூடிய குடியிருப்பு வளாகத்தில் உரிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பாதுகாப்பு முகமைகள் மேற்கொள்ளும்’ என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு குறித்து சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. தொடர்ந்து, சுப்பிரமணியன் சுவாமிக்கு வழங்கப்படும் பாதுகாப்பு குறித்து விரிவான பிரமாணப் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மா உத்தரவிட்டார். 

அதன்படி, சுப்பிரமணியன் சுவாமிக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்படுவதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. மேலும் தில்லியில் உள்ள அவரது சொந்த இல்லத்தில் முறையான பாதுகாப்பு வழங்குவதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் உறுதி கூறியுள்ளது. 

இதையடுத்து தில்லியில் அரசு பங்களாவை காலி செய்வதாக சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார். முன்னதாக, ஆறு வாரங்களுக்குள் பங்களாவை காலி செய்ய கடந்த செப்டம்பர் 14 அன்று நீதிமன்றம் கூறியிருந்தது. 

சுப்பிரமணியன் சுவாமியின் மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் கடந்த ஏப்ரலில் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →